28
அவள் விழித்திருந்தாள்
நர்மதா பூரணியிடம் நாத்தனார் பேசுவதைச் சொல்லி அழுதாள்.
“சீ.. சீ... அந்த அம்மாவுக்கு நீ இன்னும் ‘உண்டாகலை’ யேன்னு இருக்கு. கல்மிஷமில்லாத ஜன்மம். தப்பா எடுத்துக்காதே”
பாலு வழக்கம் போல பகல் சாப்பாட்டுக்கு வரும்போது பூரணி மசக்கை மயக்கத்தில் படுத்திருப்பாள்.
“நீங்களே எடுத்துப் போட்டுண்டு சாப்பிடுங்கோ...” “நீ தயிர் வச்சிருக்கிற இடம், ஊறுகாய் வச்சிருக்கிற ஜாடி, நெய் இதெல்லாம் தேடிண்டு இருக்க வேண்டியிருக்கு .. உன்னTலே முடியலைன்னா எல்லாத்தையும் எடுத்து ‘டைனிங்’ டேபிள்ளே வச்சுடறதுதானே”
“நான் போடட்டுமா பூரணி அக்கா?” என்று நர்மதா கேட்டாள்.
“போடேன்” பாலு கை கால் அலம்பிக்கொண்டு வந்து உட்கார்ந்தான்.
நர்மதா பரிமாறினாள். அவன் அவளை அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக்கொண்டே சாப்பிட்டான்.
“நீ என்ன சோப்பு ‘யூஸ்’ பண்றே”
நீ என்று சொல்லும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டிருந்தது.
“கேமி”
“ஃபாரினா?”
“ஆமாம் அவர் வாங்கிண்டு வந்தார்.”
“பேஷ்...அப்படித்தான் இருக்கணும். எஞ்ஜாய் யுவர்ஸெல்ப்”
நர்மதா சோகமாகச் சிரித்தாள். மிளகாய் சட்டினி, தொக்கு எல்லாம் பரிமாறினாள்.
“பூரணி அக்காவுக்காக எங்க நாத்தனர் பண்ணி அனுப்பினது. மசக்கையோன்னோ”
இவளுடைய வெகுளித்தனம் ஊரில் சாயிராமுக்குப்பிடித்திருந்தது. இப்போது பாலுவுக்குப்பிடிக்க ஆரம்பித்திருந்தது.