பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



என்று கடுஞ்சொல் பேசிவிடுகிறாள். இந்த அவசர புத்தி பின்னர் அவளுக்குப் பெரும் இடைஞ்சலை உண்டாக்குகிறது. அசோக வனத்தில் சிறைப்பட்டிருக்கும்போது,

என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தைகேட்டு அறிவு இலள் எனத் துறந்தானோ

என அச்சப்படுகிறாள். ஆக, இளையபெருமாளுக்குத் தான் செய்த இந்த மாபெரும் தீங்கு இராகவன் தன்னை ஒதுக்குவதற்குக் காரணமாகிவிட்டதோ என்று அஞ்சுகிறாள். இந்த நிலையில் அவள் மனத்திலே ஒரு குற்ற உணர்வு (guilt complex) ஏற்படுகிறது. இதை அறிந்துகொண்டான் இராகவன். இனி, பிராட்டியும், இலக்குவனும் அயோத்தியில் போய் நீண்ட காலம் ஒன்றாக இருக்க வேண்டியவர்கள். இந்தச் சூழ்நிலையில் இந்தக் குற்ற உணர்வோடு பிராட்டி இருப்பாளேயானால் இலக்குவனது முகத்தைப் பார்க்குந்தோறும், பார்க்குந் தோறும் மனத்தில் ஒரு நெருடல் உண்டாகும்.

இதைப் போக்க வேண்டுமென்று நினைக்கிறான் பெருமான். குற்ற உணர்வு உடையவர்கள் அதைப் போக்க வேண்டுமானால் ஒரே வழிதான் உண்டு. அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்பது மன இயலாருடைய கூற்று. அந்த நிலையிலே இலக்குவனுக்குத் தீங்கு செய்தவள் இலக்குவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதற்கு என்ன வழி? இப்படிப் பேசினால் தான் அவள் தீப் புகுகின்றேன் என்று கிளம்புவாள். அதுவே அவன் நினைத்தபடி நடந்தது. தீப் புக வேண்டும் என்று இலங்கையிலே நினைக்கிற பிராட்டி இலங்கைக்குரியவனாகிய விபீஷணனைப் பார்த்து நீ தீ அமைத்துக் கொடு என்று சொல்லியிருந்தால், அது பொருத்தமாக இருக்கும். அதை விட்டுவிட்டு இலங்கைக்குப் புதிதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/10&oldid=482290" இலிருந்து மீள்விக்கப்பட்டது