பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



வாள் என்பது அரசனுடைய அதிகாரத்தின் சின்னம். ஸிம்பல் ஆப் அதாரிட்டி (symbol of authority) அதிகாரத்தைச் சிறு பையனாகிய வாலியின் மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டிய காரணம் என்ன? வாலிக்குத் தான் இழைத்த தவறைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறான். அதற்கு வேறு வழியாகப் போக்கி யிருக்கலாம். வாலிக்கு மீட்டும் உயிரைக் கொடுத் திருக்கலாம். ஆனால், வாலி உயிரைப் பெரிதாகக் கருத வில்லை. 'என் உயிர்க்கு அஞ்சி வந்தேன்' என்று சொல்கிற சுக்கிரீவனைப் போன்றவன் அல்லன் வாலி. உயிரை ஒரு பொருட்டாக நினைக்காததால் திருப்பி அவனுக்கு உயிரைக் கொடுப்பது அர்த்தமற்ற செயல். ஆகையினால், நீ இது பொறுத்தி என அவன் மகனிடம் வாளைக் கொடுக்கிறான். ஆக, இராமன்கூட மறைந்து நின்று அம்பு தொடுத்ததை ஒரு வருத்தத்தோடுதான் ஏற்றுக்கொள்கிறான் என்று நினைப்பது தவறு இல்லை.

6. ஸ்ரீ இராமன் அவதாரமூர்த்தி என்பதைப் பல இடங்களில் கம்பன் சொல்லிச் செல்கிறான். கடவுளின் அம்சமாகிய ஸ்ரீ இராமன் பல கஷ்டங்களை அனுபவித்து இராவணனை வென்றான். இத்தகைய துயரங்களைக் கடக்க வேண்டிய கட்டாயம் என்ன? இது இராமனின் கடவுள் அம்சத்திற்குப் புறம்பானது அல்லவா?

இராமன் கடவுள் அம்சம் என்று எல்லாரும் ஒத்துக் கொள்கிறார்கள், இராமனைத் தவிர.

இரண்டாவது, பரம்பொருளாக இருப்பினும் 'நிர்குண நிராமய' என்று தாயுமானவப் பெருந்தகை சொல்வதுபோல இருப்பது பரம்பொருள். அந்தப் பரம்பொருள்கூட உலகத்திலே வந்து மானுட வடிவம் தாங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/14&oldid=510444" இலிருந்து மீள்விக்கப்பட்டது