பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


M.G.R. அல்ல, ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டே இருக்கும் மாமனிதர் என்ற எண்ணமும், அதுவரையில் அவரிடம் நான் வைத்து இருந்த நம்பிக்கையின் உயர்வும், என் மனதில் வளர்ந்து கொண்டே போயிற்று.

பிறகு, அதே சூழ்நிலைக்கு ட்யூன் போட்டு, நான் எழுதிய பாடல்தான் "கண்ணை நம்பாதே!" என்று ஆரம்பிக்கும் பாடல். இந்தப் பாடல் M.G.R. அவர்களுக்குப் பரிபூரண திருப்தியளித்தது. மறுநாள் ரிக்கார்டிங்கிற்கு வந்திருந்தார். பாடல் ஒலிப்பதிவு ஆவதற்கு 5 நிமிடங்களுக்கு முன், என்னைத் தனியே அழைத்துச் சென்றார். "கடைசிச் சரணத்தை மறுபடியும் பாடிக் காட்டுங்கள்" என்றார். பாடினேன். "பொன் பொருளைக் கண்டவுடன், வந்தவழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே" என்ற வரியில், "தன் வழி நல்ல வழியாக, வந்த வழியை விடச் சிறந்த வழியாக இருந்தால், தன் வழியே செல்வதில் என்ன தவறு?" எனக் கேட்டார். எனக்கு இரண்டாவது அதிர்ச்சி. இவர் ஒவ்வொரு நிமிடமும் N.S.K. போல, சிந்தித்துக் கொண்டே இருப்பவர் என்ற எண்ணம் மலை போல் வளர்ந்து விட்டது. பிறகுதான் "வந்த வழி மறந்து விட்டுக் கண்மூடிப் போகிறவர் போகட்டுமே" என்று மாற்றினேன். இப்படி இவருடன் எத்தனையோ அனுபவங்கள்.

பிறகு தசாவதாரத்திற்குப் பாடல் இயற்ற மல்லியம் சென்றிருந்த அய்யா உடுமலையார் அவர்கள், K.S.கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி, அந்தப் பொறுப்பை என்னிடம் முழுக்க முழுக்கக் கொடுத்த நல்ல எண்ணத்தையும், நான் எப்படி அவருடைய பாராட்டுதலுக்கு ஆளானேன் என்பதையும் எழுதுவது என்றால், அதற்கே எனக்கு ஒரு அவதாரம் தேவை. விரிவஞ்சி சுருக்கிக் கொள்கிறேன்.

இப்படியாக எத்தனையோ அனுபவங்கள். திரையுலகின் வளர்ச்சியிலும் தொடர்ச்சியிலும் என்னுடைய பங்கிற்குச் சான்றானவை. ஆல் தழைத்துக் கொண்டேயிருக்கிறது.