பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96. வாடாத பயிர் சிலவற்றைச் செய்து பழகினான். மனம் ஒருமைப்பட்டது. அச்சமில்லாத ஒருமை. அக்கிரமங்களுக்கு எதிரான ஒருமை. சித்திரை விசாகம். முருகன் கோவில் முன்னால் தேராகவும், திருவிழாகவும் மக்கள் வெள்ளத்தில் மத்தியில் நின்றது. சிறிது நேரத்தில் பாட்டுக் கச்சேரி. அப்புறம் உபன்யாசம்...... உபன்யாசம் செய்பவர் வந்துவிட்டார். கச்சேரிக்காரர்களைக் காணவில்லை. மக்கள் பொறுமை இன்றி முண்டியடித்தார்கள். பெண்கள் பக்கமாக நின்ற, பழைய சகாக்களும், தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். "வேல்சாமிய, மேடையில இழுத்துவிடுவோமோ?" அவன் தெளிஞ்சுட்டான். இப்போ நம்மள கண்டா பேசமாட்டக்கான் பாரு' "இது பைத்தியம் பிடிக்கிறதுக்கு முன்னால வார தெளிவு! வாங்கப்பா பயல மேடையில ஏத்தி ஒளர வைப்போம்." அந்த நால்வர் கூட்டம் பெண் ரசனையை உதறிவிட்டு வேல்சாமி பக்கம் வந்தது. கிருஷ்ணன், கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டே, வேல்சாமிக்கு வேண்டுகோள் விடுத்தார். 'மாமா சொன்னதுமாதிரி. நீ ஞானியாயிட்டே! மேடையில போயி பேசப்படாதா? எங்களோட அஞ்ஞானத்தைப் போக்கப்படாதா? வேல்சாமி, அவர்களை நிமிர்ந்து பார்த்தான். பிறகு எதுவும் பேசாமல், மேடையில் ஏறி, மைக் முன்னால் நின்றான். கூட்டம், ஒரு பைத்தியத்தின் கூத்தை ரசிக்கப் போவதுபோல் சிரித்து, சிரித்து ஒத்திகை பார்த்தது. தங்கைக்காரியும், தம்பி முத்துவும் "அண்ணாச்சி. அண்ணாச்சி" என்று மேடையை நோக்கி ஓடினார்கள். அவர்களை, சில வேடிக்கைக்காரர்கள் பிடித்துக் கொள்ள அங்கே ஒரு மல்யுத்தமே நடந்து கொண்டிருந்தது.