பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 அன்னையை மறைத்த சிலை தாயோடு சேர்ந்துகொண்டு மனைவியை நோகடித்ததையும், அந்த மனைவி பிள்ளைகளோடு சேர்ந்து கொண்டு தன்னை நோகடிப்பதையும். கொண்டுவந்து போட்டது. மனதை பிடிக்கப்போன ஏகாம்பரம் இப்போது மனதால் பிடிபட்டு அரற்றினார். அதன் நினைவுச் சாம்பல்கள் நீருபூத்த நெருப்பாய் இருப்பது கண்டு கைகளை உதறினார். ஆனாலும் வழக்கப்படியான மனத்தின் கூச்சல் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு அந்த மனப்பூச்சியை கண்ணொளிக் கோடுகளால் அழுந்தப் பற்றி மார்பு பிரதேசம் வழியாக தொண்டைக்குக் கொண்டுவந்தார். அங்கிருந்து மூக்கின் முனைவழியாக புருவ மத்திக்கு கொண் டு போய் , பி ன் தலைக்கு திசை திருப்பி , உச்சந்தலையில் நிலை நாட்டினார். கண்ணொளிக் கோடுகளும், பிரக்ஞைக் கோடுகளும் தனித்தனியே ஒன்றோடு ஒன்றுபட்டு இருவேறு சாய்வுக்கோடுகளாய் முக்கோணமுனையில் சந்தித்துக்கொண்டன. குலவியாய்ப் போன மனம் ஒரு வஸ்த்துவாகி, உள் உச்சந்தலை முக்கோணத்தின் அடிக் கோடாயிற்று. இந்தச் சமயத்தில், பரிச்சயப்பட்ட ஒரு குரல் அழுகையாய் ஆவேசமாய் ஒலித்தது. அது ஞான சித்திக்குரல் என்று நினைத்து, ஏகாம்பரம் மெல்லச் சிரித்தார். குருநாதர் சொன்னதுபோல் ஏதோ ஒரு சக்தி தன்னோடு பேசப்போவதாய் அனுமானித்துக்கொண்டு அதற்கு அவர் காதுகொடுத்தார். ஆனாலும் அவர் உடம்பு உலுக்கப்பட்டது. உடனே கண்மூடித்தனமாய் கிடந்த இமைகள் விலகின. கருவிழிகள் பூத்தன. எதிரே அவரது மைத்துனர். இவரது மகனுக்கும் பெண்கொடுத்த சம்பந்தி. குய்யோ முறையோயென்று கதறினார். "மோசம்போயுட்டோமே மச்சான். உங்க ஒரே மகன். என்னோட மருமகன். லாரில அடிபட்டோ, கார்ல மோதியோ ஆஸ்பத்திரில கிடக்காராம். போலீஸ்காரன், விலாவாரியா சொல்லாம, போனை வைச்சுட்டான்.