பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மாவைத் தேடி. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில், மூன்று நோயாளிகள் மரண அவஸ்தை தாங்காமல் முனங்கிக் கொண்டே புரண்டு கொண்டிருந்தார்கள். டாக்டர்களுக்கு அவர்களின் முடிவின் முடிவு தெரியும். அவர்களுக்கும், தங்கள் அந்திம காலத்தின் அடையாளம் புரியும். ஸ்பெஷல் வார்டில் படுத்துக் கிடந்த மாஜி டெப்டி கலெக்டர் மயில்நாதன், தான் ஏழு வயதுச் சிறுவனாக இருக்கும்போது ஏற்பட்ட அவஸ்தை, இப்போது மீண்டும் வந்திருப்பதை உணர்ந்தார். அப்போது அவர் அம்மா அவரருகே கண்ணிர் சிந்த அமர்ந்து, உடம்பைப் பிடித்துவிட, அவர் அந்தப் பையன், அவள் மடியிலே தலைவைத்து அரற்றினான். காலமான அந்த அன்னையிடம் இப்போது போகவேண்டும் என்று அவர் துடித்தார். நான்கைந்து கட்டில்களில் ஒரு கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கிடந்த மிராசுதார் தங்கச் சாமிக்கும் அதே எண்ணம். "நான் சொன்னேனே. மழையிலே நனையாதன்னு. கேட்டியா” என்று சொல்லி, தன்னைத் தோளில் வைத்துக் கொண்டு வைத்தியரிடம் ஒடிய அந்த அம்மாவிடம் போக வேண்டும் என்று, முற்றிப்போன ஆஸ்துமாவில் வற்றிப்போன தங்கச்சாமி தவித்தார்.