102
ஆடும்
அல்லியின் நெஞ்சில் நினைவுகள் குறுகுறுத்தன. அந்த நினைவுகளின் ஒவ்வொரு அணுவிலும் கோடிக் கனவுகள்.
“அத்தான்…!”
பெருமூச்சோடு அவளது உதடுகளில் பிறந்த இவ்வார்த்தையில் ஆழம் காண முடியாத பந்தமும், பாசமும் தொனித்தன. அந்தத் தொனியில் துயின்ற எண்ணங்கள், காதலின் அற்புதத்தை கதையாகச் சொல்லி மகிழ்ந்தன.
“அத்தான், நீங்க எவ்வளவு நல்லவங்க…! அனாதையாயிருந்த எனக்கு ஆதரவு தந்ததும் இல்லாம, உங்க வாழ்க்கையிலே பங்கு பெறுகிற பாக்கியத்தையும் தந்திட்டீங்களே! நெசமாகவே நான் அதிர்ஷ்டக்காரிதானா அத்தான்?”
அல்லி தன் இதயத்தோடு பேசினாள்.
‘… … …புழுதியிலே கிடந்த பூமாலையை எடுத்து சாமிக்குச் சாத்துறது மாதிரி, விதி என்னை எங்க அத்தானோட கொண்டு சேர்த்திடுச்சு. இதுக்காக நான் இப்போ யாருக்கு நன்றி சொல்றது? அத்தானுக்கா?… இல்லாட்டி தெய்வத்துக்கா…? ம்… இனிமே என்னைப் பொறுத்த வரையிலே என்னோட அத்தான்தானே எனக்குத் தெய்வம்…?’
அல்லியின் இதயம் பேசிற்று;
‘நானும் அவுங்களும் மணையிலே உட்காருறப்போ…ம் தூரத்திலே நிக்கிற போதே, ‘திருட்டுப் பார்வை’ பாக்கிறதிலே குறைச்சல் இல்லே. இதிலே பக்கத்திலே போயும் உட்கார்ந்திட்டா! அவ்வளவு தான்!… என்னதான் பிரியம் இருந்தாலும், இவுங்களுக்கு இவ்வளவு அவசரம் கூடாது; பாவம் அவுங்களுக்குத்தான் என் மேலே