என் ஊமைத்தனத்தைப் போக்க நானும் முயன்றேன். அண்ணா உமாபதியும், தோழர் ‘பூவை’யும் முயன்றனர். எங்களைப் போன்ற எழுத்தாள அன்பர் சிலரும் முயன்றனர். முயற்சி திருவினையாக்கிற்று. இன்றையச் சோழத்தின் உள் வாசலிலே கோலமாக இழைத்திருக்கும் ஒரு சிற்றூரை எடுத்துக் கொள்வதாகத் தீர்மானித்தோம் பழங்காலச் சோழத்திற்குப் பக்தி செலுத்துவதற்காக, ஊமையாக நிற்கும் நான் , இன்றையச் சோழத்திற்காகத் தோழமையுடன் வாய் திறந்து பேசமுடியும். என் வாயைக் கிளறி விட்டுப் பின்னர் பேசவிருக்கும் அன்பர்கள், புகழ் வளர்ந்த எழுத்தாளர்கள்: பண்பால் உயர்ந்தவர்கள்.
எல்லோருமாகச் சேர்ந்து தீபம் ஒன்றை ஆக்கினோம். அதைச் சோழ மண்ணில் ஏற்றி வைக்கும் பணியை எனக்கிட்டனர். அதை ஆட்டி வைக்கும் பணியை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ‘பூவை’யின் பொறுப்பு என்னவென்பதை இப்பொழுதே நான் சொல்ல மாட்டேன். அது ‘சஸ்பென்ஸ்’.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நாங்கள் சேதுவில் பாலம் அமைக்கிறோம். எங்கள் ஒவ்வொருவருடைய முயற்சியும் அணில் முயற்சிதான். பாலம் ஒழுங்காக அமைந்து விட்டால், அணிலைப் பாராட்டாதீர்கள் அமைப்பைப் பாராட்டுங்கள்.
வாசவன்