தீபம்
109
இலைக்கு முன் உட்கார்ந்து கொண்டு, “ஏன் ஆச்சி, வாத்தியாரய்யா வரலியா?” என்று கேட்டாள் அல்லி.
“அவரு பூஜை பண்ணிக்கிட்டு இருக்காரு அம்மா; வர நாழி செல்லும்; நீ சாப்பிடு.”—என்ற நாச்சியாரம்மாவின் குரலில் பரிவு இருந்தது.
சாப்பிட்டுக் கொண்டிருந்த அல்லியின் விழிகளைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ‘சலங்கை’ இழுத்தது.
‘இனிமே அதை நாம்ப கட்டிக்கிடவே முடியாதா? நிரந்தரமா அதை விட்டுட வேண்டியதுதானா? ம்! கல்யாணம் ஆயிட்டப்புறம், ‘குடும்பம்’ நடக்கிறதை கவனிக்கிறதா, அல்லது ‘சலங்கை’யைக் கட்டிக்கிட்டு ஆடறதுக்குப் போறதா? வேணுமானா, எப்பவாச்சும் நான் ஆடறதைப் பார்க்கணுமுன்னு அத்தான் சொன்னா, அப்ப கட்டிக்கிடலாம்… …!’
முடிவுகளே, முடிவுகளுக்கு மருந்தாக இருந்தன.
“நாளன்னிக்குத்தானே அம்மா, நிச்சயதாம்பூலம்?”
“ஆமாம்மா!”
அல்லிக்குச் சொல்வதற்கே வெட்கமாக இருந்தது.
“அப்போ, நாளை ராத்திரிக்கே அவுங்க எல்லாம் வந்திடுவாங்க. அவுங்களோட ‘அது’வும் கூட வருமில்லே?”
நாச்சியாரம்மாவின் குரலில் ஏன் அந்தக் குறும்பு?
“எது?”
தெரியாதவள் போல் கேட்டாள் அல்லி.
“எதுவா? புரியாதது போல நடிக்கலாமுன்னு பார்த்தாயா? எங்கே என் முகத்தைப் பார்த்துச் சொல்லு. நான் எதைக் கேட்டேன்னு நெசமா உனக்குத் தெரியாதா அல்லி?”