உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




பொறி ஏழு:

மாற்றமா?
தடுமாற்றமா?


நின்று, நிதானித்து, நெட்டுயிர்த்து, நெடுமூச்செறிந்து, சிந்தனை செய்வதற்கே, அவகாசம் அற்ற முறையில் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துத் தொடர்ந்து கொண்டே போயின. அபலை அல்லி திணறினாள். தவித்தாள், தடுமாறினாள்.

கடிதம் முழுவதையும் படிப்பதற்குள்ளாகவே, அவள் உள்ளம் கொந்தளிக்கத் தொடங்கி விட்டது. அந்தப் புதிய செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சியைச் சமாளித்துக் கொண்டு, அருணாசலத்தைப் பற்றி அவள் எண்ணமிட முயல்வதற்குள், “அம்மா!…அல்லி!” என்று ராஜநாயகத்தின் குரல் ஒலித்தது.

கடிதத்தைக் காண்பிப்பதா, மறைப்பதா, மேற்கொண்டு என்ன செய்வது, எப்படி நடந்து கொள்வது, எதனால் நலம் கிட்டும், எதனால் தீமை ஏற்படும் என்பனவற்றை, உடனடியாக முடிவு செய்வது இப்போது அவளுக்குப் பெரும் பிரச்சினை ஆகி விட்டது. அதற்குப் போதிய அவகாசம் இல்லை. பிறகு யோசித்துத் தகுந்தபடி நடந்து கொள்ளலாம் என்று எண்ணிக் கடிதத்தைச் சட்டென தலையணையின் அடியிலே மறைத்து வைத்தாள். இதற்குள், ராஜநாயகம் அவள் இருந்த இடத்தை அணுகி விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/115&oldid=1687694" இலிருந்து மீள்விக்கப்பட்டது