தீபம்
129
“அல்லி!…”
வாத்சல்யம் ததும்ப அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்த ராஜநாயகத்தை, நாச்சியாரம்மா எதிர் கொண்டாள்.
“என்ன இது? நீங்க கூட்டிக்கிட்டு வரச் சொன்னதாக சினிமாக் கம்பெனி ஆள் வந்து, அதைக் காரிலே கூட்டிப் போனானே?”
“ஆ!… என்ன?…நான் கூட்டிக்கிட்டு வரச் சொன்னேனா? ஐயையோ! யார் வந்தாங்க? எங்கே இட்டுப் போனாங்க?”
கேட்டுக் கொண்டே வந்தவர், நாச்சியாரம்மாவின் கையிலிருந்த கடிதத்தைக் கவனிக்கத் தவறவில்லை.
ராஜநாயகம் வெடுக்கென்று கடிதத்தைப் பிடுங்கிப் படித்தார். “அட பாவிப் பயலே!” என்று கூவினார்.
“வாத்தியாரையா!”
ராஜநாயகம் கண்டார். நேர்முகமாக அருணாசலத்தையே கண்டார்.
“பாவி! மகா பாவி!”—பாய்ந்து, அவன் கழுத்தைப் பிடிக்கப் போனார். அவன் தப்பித்துக் கொண்டு தூர விலகி, “வாத்தியாரய்யா! பைத்தியம் பிடிச்சிட்டுதா?” என்றான்.
“என் மகளை அநியாயமாகக் கொன்னுப்பிட்டேயடா பாவி! அவள் ஏன் கல்யாணத்தை ஒத்திப் போட்டாங்கறதை இந்தக் கடுதாசில்லே சொல்லுது?”
அருணாசலம், அவர் கையிலிருந்த கடிதத்தை வாங்கிப் படித்தான். “சுகுணா…! இப்படி ஒரு உறவுப் பொண்ணே எனக்குக் கிடையாதே” என்றான்.