உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீபம்

171


நடித்த நாளும், பொழுதும் சிக்கல் பிடித்துக் கிடந்த நினைவுக் கயிற்றினின்றும், சிக்கறுத்துக் கொண்டன. உம்மைப் பழவினையின் எண்ணங்கள் தூசி தட்டிக் கொண்டன. பசுமை படிந்த நினைவுகள், கனவுகளாகத் தோன்றின.

அறந்தாங்கியில் கோட்டையில், சரஸ்வதி தியேட்டரில். ‘பேசும் படம்’ ஓடிக் கொண்டிருந்தது. ‘அடி ஆத்தே! படம் பேசுதே?… எம்பிட்டுக் கூத்தாயிருக்கு?’ என்று அதிசயப்படத் தொடங்கினாள் அல்லி. பிஞ்சுப் பிராயத்து நிகழ்ச்சி இது. அவளையும் அறியாமல், அவ்வப்போது திரைப்படம் அவளுள் ஓர் இடம் பெற்றிருந்ததென்பதை, அவளுடைய இதயத்தின் நுண் அறிவுப் புலன் மட்டுமே அறிந்திருந்தது. அந்த ஆசையின் வடிவமாகவோ, அல்லது எண்ணத்தின் எதிரொலியாகவோ, அவள் பேசும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நடித்ததைப் பார்க்கையில், அவளுக்குக் கண்ணீர் வந்து விட்டது. அவள் முன், எதிர்காலம் ஒளிப் பிழம்பாகத் தென்பட்டது. அது கடந்த நிகழ்ச்சி, பழங்கணக்கு.

ரெயிலடியின் சுறுசுறுப்புக்கு நேரம், காலம் உண்டு. மாயவரம் வழியாக, அறந்தாங்கி செல்லும் ‘பாஸஞ்சர்’ வண்டியின் புறப்பாடு பற்றிய அறிவிப்புச் சொல்லப் பட்டது. பக்கவாட்டில் பார்வையை விலக்கினாள். கைக்கடிகாரம் திகழ்ந்த இடம் விழித் திவலையை ஏந்தியது. எதிர்காலத்தில் இருள் சூழ்ந்தது. சுவரொட்டி விளம்பரம், அவளுக்குக் கனவாகத் தோற்றம் தந்தது. “தாயே!” கண் காணாதவனையும், கண் கண்டவனையும் எண்ணமிடலானாள். புண்ணான நெஞ்சம் புலம்பியது. அழ விரும்பாத அவள், இப்பொழுது அழுதாள்.

“டோய், அவளைப் பார்டா, சினிமா இஸ்ட்டார்டா… டோய்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/172&oldid=1688804" இலிருந்து மீள்விக்கப்பட்டது