உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

ஆடும்


அல்லிக்கு என்ன பதில் சொல்வது, எப்படிப் பதில் கூறுவதென்று புலனாகவில்லை. அருகிருந்த மேஜை மீது கிடந்த பத்திரிகையைப் புரட்டினாள் அவள். முதற் பக்கத்தில் பேனாவால் கிறுக்கப்பட்டிருந்த ‘அருணாசலம்’ என்னும் பெயர், அவள் பார்வையில் பட்டது. ஆறு எழுத்துக்கள் அவள் நெஞ்சத் துடிப்பினைத் தொட்டன; மனச்சாட்சி சுட்டது. இதயத்துள் எரிமலை வெடித்தது.

“அல்லி அக்கா”

செந்தாமரையின் மனம் அடித்துக் கொண்டது. அல்லி நல்ல முடிவைத் தெரிவிக்க வேண்டுமே என்று மாங்குடிக் காளியம்மாளைத் தொழுதாள். அன்றொரு நாளில் அல்லியுடன் தொடர்ந்த ஓர் ஆடவனுடன், சிங்கப்பூர் சாத்தையா ஏதோ பேசிக் கொண்டு காரில் சென்றதைக் கண்ட செந்தாமரை, ‘பாம்பு கொத்தப் படம் விரித்து விட்டது. விஷம் உடலில் பரவு முன், போய்த் தடுக்க வேண்டும். மாசற்ற அன்புக்கு இதுவே கைமாறு’ என்பதாகத் தீர்மானம் செய்தவளல்லவா இந்தத் தாமரை?

தோழி அல்லியிடம், அவள் முடிவைப் பற்றிக் கேட்டாள். அவள் ஆண்டவனிடம் தன் முடிவின் அந்தரங்கத்தை விசாரித்தாள். அந்தப் பெயரின் ஆறு எழுத்துக்களும் விசுவரூபம் எடுத்தன. தனக்கென இடமின்றி தனக்குரிய இடம் எதுவென்று புரியாமல், தன்னந் தனியளாகப் புறப்பட்டதை மறப்பாளா? ‘நீ மொந்தைக் கள்ளு’ என்று பெற்றவள் முடிவு கட்டிச் சொன்ன மொழியை, நினைக்காமல் இருப்பாளா? இரட்டைப் புலிகளுக்கிடையே அகப்பட்ட புள்ளி மான் தப்பி, மோனத் தவத்திடையே, மனித உணர்ச்சியை இழந்து விடாத ஈர இதயத்தின் காரணமாகப் போக்கிரி அருணாசலத்துக்குச் செய்த உதவியைத்தான் அவள் எண்ணாமல் இருக்க முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/175&oldid=1688813" இலிருந்து மீள்விக்கப்பட்டது