உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீபம்

175


பட்டணம் வந்த நாட்டுப் புறாவைக் கொத்தத் துடித்த வல்லூறு, பாசத்தின் உருவமாக மாறி ‘தந்தை’ ராஜநாயகமாகத் திகழ்ந்த அந்தப் புனித வேளையை, அவள் எவ்விதம் நினைவிலிருந்து துறக்கக் கூடும்?

‘அருணாசலம்!’

நெருப்புத் துண்டங்களாக ஒளி கக்கிப் பயங் காட்டிய அந்த ஜோடிக் கண்கள், அவள் மனக் கண்ணில் தெரிந்தன. முதற் சந்திப்பு, அந்தச் சந்திப்பில் விளைந்த முதற் காதல், போக்கிரியைத் திருத்திய முதற் பணி, அருணாசலத்தின் ஒத்தாசையினால், திரைப்படக் காட்சியில் ஆடிய முதல் நடனம், ‘அல்லிக்கும் எனக்கும் கல்யாணம் வேண்டாம்!’ என்று கூறும் அளவுக்குக் காரணமான சுகுணா என்பவளின் முதல் அனாமதேயக் கடிதம், சாத்தையா—இன்னாசி ஆகிய இருவரின் பயங்கரப் பேயாட்டத்தில் பங்கு கொண்ட அருணாசலத்திடமிருந்து உண்டான முதற் பிளவு, அதன் விளைவாக இறுதியில் ஏற்பட்ட முதற் பலி ஆகிய இத்தனை காட்சிகளும், அவள் முன்னே ஏடு புரண்டன; நினைவுகள் நாட்குறிப்புச் செய்திகளாகத் தோன்றின,

‘என் அழகால் ஆட்டி வைத்து, என் மதியால் திருத்தினதாகப் பெருமைப்பட்ட ‘அவர்’ இன்று எங்கே?…

நான் விழித்துக் கொண்டு, கடைசியில் அவரும் விழிப்புப் பெறும் நிலை அண்டினதும், சட்டமும் விழித்துக் கொண்டு விட்டதே?…’

பூதாகாரமாகத் தோற்றம் அளித்தான் அருணாசலம். பலியான சாத்தையாவுக்காக, அல்லி ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினாள்.அவளின் ‘மொந்தைக் கள்’ எழிலில் கிறங்கிப் போதை கொண்டு, தான் ஆடியதுடன், அவளையும் ஆட்டிப் படைத்த இன்னாசிக்கு கிடைத்த முடிவுதான் வாழ்வின் முற்றுப் புள்ளியா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/176&oldid=1688820" இலிருந்து மீள்விக்கப்பட்டது