தீபம்
27
வாழ்கிறார்கள். நாயும்தான் வாழ்கிறது. மனிதனை விட நாய் ஒரு படி மேல்தான். அதற்கு அடுத்த வேளையைப் பற்றிய கவலை இல்லை. மனிதனுக்கு அடுத்த ஜன்மத்தைப் பற்றிக் கூடக் கவலை! நாளையைப் பற்றிச் சிந்திப்பதால், இன்றைய இன்பத்தை அவனால் அனுபவிக்க முடியவில்லை. நடப்பது நடக்கும். நடந்து கொண்டிருப்பதைக் கை நழுவ விடுவானேன்?
“சரிதான்; பட்டணம் போக வேண்டியது தீர்மானம்; என்ன செய்ய வேண்டும் என்பதைப் பட்டணம் அல்லவா கூற வேண்டும?”
தெருவில் ஒரே கூட்டம். சொக்கப்பனையைப் பார்ப்பதற்காகப் பிள்ளையார் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது ஊர். ஒருத்தியை உயிரோடு வேக வைத்து விட்டு, மற்றொரு பச்சைக் குச்சை எரிய வைக்கச் சென்று கொண்டிருக்கிறது. பிணத்தை எரித்து, எரித்துப் பழக்கப்பட்ட இந்த மனித சமுதாயம், எதையாவது, எந்தப் பெயரைச் சொல்லியாவது எரித்துக் கொண்டிருக்க விரும்புகிறது. சொக்கப்பனையும் அதில் எழுந்த ஒன்றுதானே?
நின்று பிரயோசனம் இல்லை. கீழண்டைப் பக்கம் திரும்பி நடந்தாள். அங்கே கூட்டம் இல்லை. எதிர்ப்பட்ட வாய்க்காலைத் தாண்டி, வயல் வரப்பில் சென்றாள். நாலு வயல்களைக் கடந்து விட்டால், வண்டிப் பாதை அதில் இரண்டு மைல் கிழக்கு நோக்கி நடந்தால், ஆயிங்குடிதான். முன் ஜாமத்தில் வரும் ‘காரைக்குடி மாயவரம் பாஸஞ்சரை’ப் பிடித்து விட்டால், காலைப் பொழுது சென்னையில் விடியும்.
‘விடியும் பொழுது நல்ல பொழுதாக இருக்க வேண்டும்!’ வயல் ஓரங்களில் பச்சைப் பயிர்களுக்கிடையே ஊன்றி வைத்திருந்த எரிந்து கருகிய சுளுந்துகள், இளம் விதவைகளின் உள்ளத்தைப் போல அழுது கொண்டிருந்தன.