28
ஆடும்
நிலவு சிரித்துக் கொண்டிருந்தது. பழியாடும் ஊரைப் போல.
நடந்த வேகத்தில், வரப்பில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இரண்டொரு நண்டுகள் நசுங்கின. பயிர்களின் தண்டுக் குருத்தை ருசித்து மெல்லும் விட்டில் கூட்டங்கள், அரவம் கேட்டு ‘உஸ்’ஸென்று பறந்தன; தவளைகள் தத்தி ஓடிப் பிலாக்கணம் பாடின. நீர்க்கால்களை ஒட்டியிருந்த நீர் முள்ளிகளின் சிவப்பு முட்கள், அவளுடைய மெல்லிய பாதங்களைக் கீறி அசைந்தன. எப்படியோ நாலு வயல்களைக் கடந்தாகி விட்டது. இனி வண்டிப் பாதைதான். பிறகு அவ்வளவு சிரமம் இல்லை.
வண்டிப் பாதையில் கால் வைத்தாள். பின்னிருந்து ஒரு கை, அவள் கையைப் பற்றியது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். இடிச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான் இன்னாசி.
“எங்கே போறே என்ன விட்டுட்டு? உன்னை ருசிக்காமே விட மாட்டேன்!” என்று முரட்டுக் கையை அல்லியின் முழங்கைக்கு ஏற்றினான்.
பையைச் சுமந்து கொண்டிருந்த அல்லியின் மற்றொரு கையை, வேறொரு கரம் வேகமாகப் பற்றியது. பக்கவாட்டில் பார்த்தாள், சிங்கப்பூர் பணக்காரன் சாத்தையா அவன்! “எத்தனை நாளா உன் பேரிலே கண் போட்டிருக்கேன்! ஊரை விட்டு ஓடினா, உன்னை விட்டுடுவேனா…?”
“என்னோட போட்டிக்கு வருகிறாயா, சாத்தையா?” ஏசுகிறான் இன்னாசி.
“அல்லிக்காக என் உயிரையே கொடுக்கத் தயாரா இருக்கேன்!”