பட்டணம் வந்த
நாட்டுப் புறா!
அல்லியின் உடல் நடுங்கியது. பயம் என்பதை அறியாமல் வளர்ந்தவள் அவள். ஆனால், இப்பொழுது, அவள் பயத்தால் விதிர் விதிர்த்தாள்.
“எந்த ராத்திரியிலும் எங்கு வேண்டுமானாலும் போவேன். பயம் என்னடி, பயம்? நான் யாருக்காக அல்லது எதுக்காகப் பயப்பட வேண்டும்?” என்று கேட்கும் துணிச்சல் அவளுக்கிருந்தது. அது முன்பு. அவளுடைய சிநேகிதி செந்தாமரையிடம்தான் அல்லி அப்படிக் கேட்டாள். “முன்னிரவிலும், அதிகாலையிலும் குளத்துப் பக்கமெல்லாம் போகிறாயே? தனியாகப் போய் வர உனக்குப் பயம் இல்லையா?” என்று தோழி கேட்ட போதுதான், அல்லி அவ்வாறு பேசினாள்.
“அர்த்த ராத்திரியில், சுடுகாட்டுக்கு வேண்டுமானாலும் போய் வருவேன், பேய் பிசாசைக் கண்டால் கூட, நான் பயப்பட மாட்டேன்!” என்றும் அவள் சொன்னாள்.
அதே அல்லி ஊரை எண்ணிப் பயப்பட நேர்ந்தது. அவளைப் பொறுத்த வரை, சுடுகாட்டை விட, மாங்குடி மோசமாகி விட்டது. அவளுக்கு உற்ற தோழியாக இருந்தவளும், அவள் வாழ்ந்து பெரியவளாக ஊக்கமும்