தீபம்
43
அவனை அடிக்க மீண்டும் கை ஓங்கினார் பரிசோதகர். அவர் எதிர்பாராத காரியம் ஒன்று நிகழ்ந்தது. அவன் எதிர்பார்த்திராதது அது. யாருமே எதிர்பார்க்க முடியாததுங்கூட.
“அவரை அடிக்க வேண்டாம். உங்களுக்குப் பணம்தானே வேண்டும்?” என்ற குரல், கணீரென ஒலித்தது. பரிசோதகரின் பார்வையை இழுத்தது.
வியப்புடன் திரும்பிய அவர் திகைப்படைந்தார். போக்கிரியையும், பரிசோதகரையும் கவனித்தபடி இருந்து, கவனம் கலையப் பெற்ற பிரயாணிகளும் திகைத்தார்கள். போக்கிரி கூட திகைத்துத்தான் நின்றான்.
பிறர் திகைப்பையோ, வேறெதையுமோ கவனிக்காமல், “இந்தாங்க!” என்று பணத்தை நீட்டினாள் அல்லி. அவர் அவளை அதிசயமாகப் பார்த்தார். “ஏன் யோசிக்கிறீங்க? இதோ வாங்கிக் கொள்ளுங்கள்,” என்று அல்லி மீண்டும் சொன்னாள்.
அவர் பணத்தைப் பெற்று, ரசீது எழுதிக் கிழித்துக் கொடுத்து விட்டு நகர்ந்தார். அவனையும், அவளையும் ஒரு தினுசாகப் பார்த்து விட்டுத்தான் நகர்ந்தார். பிறகு மறு பெட்டிக்குத் தாவி, மறைந்தார். பிரயாணிகள் பலரும் பல விதமாகப் பேசலானார்கள்; ‘அவனுக்கு வேண்டியவளாகத்தான் இருப்பாள்’; ‘அப்படித் தோணலே’; ‘எவளாக இருந்தாலும், பெயரெடுத்தவளாகத்தான் இருக்க வேணும். இல்லையென்றால், இவ்வளவு துணிவாக நடப்பாளா?’;‘இவளுக்கு ஏனோ இவ்வளவு அக்கறை?’
ஒருவன் தனது பாரதி ஞானத்தை அம்பலப்படுத்திக் கொண்டான்.
“காதலொருவனைக் கைபிடித்தே; அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதர றங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சிபெறச் செய்து வாழ்வமடி!”