தீபம்
49
‘கலைக்கூட’த்திலேயே தங்கியிருக்கலாம் என்று வாத்தியார் அனுமதித்து விட்டார்.
“உங்களுக்கும் நடனம் ஆடத் தெரியுமா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் அல்லி— அருணாசலத்திடம், தனிமையில்தான்.
“ஊகுங்!” எனத் தலையசைத்தான் அவன்.
“பின்னே?”
“நான் வாத்தியாருக்கு ரொம்பவும் வேண்டியவன்,” என்றான் அவன்.
அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை அவளால். ‘ரொம்பவும் வேண்டியவன்’ என்றால் என்ன அர்த்தம்? அதுவும் அவளுக்குப் புரியவில்லை. ஆயினும், அவனிடம் அவள் விளக்கம் கோரவில்லை,
“வந்து இரண்டு தினங்கள்தானே ஆகின்றன. புரிந்து கொள்ளாமலா போகப் போகிறோம்” என்று எண்ணினாள் அல்லி. ‘இந்தப் பெரிய இடத்தில் பலரோடு வாழ வாய்ப்பு ஏற்பட்டதும் நல்லதுதான். திடீரென்று சந்தித்த ஒருவனோடு, தனி இடத்தில் தங்க வேண்டும் என்றால், தயக்கமாகவும், பயமாகவும்தான் இருக்கிறது’ என்று அவள் மனம் குறுகுறுத்தது.
அப்பொழுது பிற்பகல். வெயிலின் கொடுமை பலரையும் கிறக்கிய நேரம். அல்லி ஓர் அறையில் தனியாகத்தான் இருந்தாள். அவள் மனம் எங்கெங்கோ சஞ்சரித்துக் கொண்டேயிருந்தது.
அப்பொழுது அறைக்கு வெளியே யாரோ வந்து நின்றது போல் தோன்றியது. அருணாசலமாக இருக்கும் என எண்ணினாள் அல்லி. “யாரது? - உள்ளே வரலாமே? என்றாள்.