62
ஆடும்
திருமாலின் சக்கரமான ஆதவன் சுழன்று, மலை வாசலுக்குப் போயிருந்தான். அல்லி தன்னை மறந்த நிலையில் நின்றிருந்தாள்.
“அல்லி!”
தேனும், பாகும் கலந்தாற் போல், இனிப்பாக அந்தக் குரல் காற்றில் மிதந்து வந்தது.
அலை அலையாக வாரி விடப்பட்ட கிராப்புத் தலையும், பள பளக்கும் ‘சிலாக்’ சட்டையுமாக அருணாசலம் வாயிற்படியைத் தாங்கியவாறு நின்றிருந்தான்.
குறுகுறுத்த தன் விழிகளை அவன் பால் திருப்பி, புருவங்களை ‘என்ன?’ என்ற பாவனையால் அல்லி கேட்டாள்.
“இங்கே வாயேன், சொல்கிறேன். அது ஒரு பெரிய ரகசியம்!” என்று சிரித்தவாறு கூறினான் அருணாசலம்.
அல்லி அவனுக்கு அருகில் வந்து நின்றாள். பிறகு ஆவலுடன், “என்ன அது?” என்று கேட்டாள்.
“ஊரெல்லாம் ஒரே மக்கள் கூட்டமாக இருக்கிறது. அங்கே, இங்கே என்று வேடிக்கை பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள். நீயும், நானும் தனிமையில் பேச இங்கு சந்தர்ப்பமே இல்லையே? வாயேன். இப்படி வெளியே போய் விட்டு வரலாம்,” என்று அழைத்தான் அவன்.
“ஐயா வீட்டிலே இல்லையே?” என்றாள் அவள்.
“நீ என்ன இன்னும் பச்சைக் குழந்தையா? உன்னைப் பற்றி ஒரு தீர்மானத்துக்கு வர உனக்கு வயசாகவில்லையா? கிளம்பு அல்லி, ஹும் சீக்கிரம்” என்று அவசரப்படுத்தினான் அவன்.