தீபம்
67
“தெரிந்தது, தெரிந்தது, இப்பொழுது நாம் எங்கே போகிறோம், தெரியுமா?”
“எனக்கென்ன தெரியும்?” என்று உதட்டைக் குவித்தவாறு கூறினாள் அல்லி,
காரோட்டியின் பக்கம் தன் தலையைச் சாய்த்து, அவன் காதருகில் ஏதோ கிசுகிசுத்தான் அருணாசலம். கார் ‘விர்’ரென பறந்து வந்து, அடையாற்றில் ஒரு பெரிய மாளிகையின் முன்பாக நின்றது. வாயிற்கதவைத் திறந்து விட்டு வணங்கினான் வாயிற் காப்போன்.
‘அழகி படத் தயாரிப்பாளர்கள்’ என்று கொட்டை எழுத்தில் இருப்பதை, வெகு சிரமத்துடன் கூட்டிப் படித்தாள் அல்லி. அவள் எழுத்துப் பயின்றதும், ராஜநாயகத்திடம்தான்.
“என்ன இது? எங்கே போகிறோம் நாம்” என்று மெல்லக் கேட்டு, அவனைப் பார்த்தாள் அல்லி.
“ஒரு படக் கம்பெனியின் முதலாளியிடம், உன்னைப் பற்றி நிறையக் கூறி இருந்தேன் அல்லி. அவரைப் பார்த்து, உன்னை ஒரு படத்தில் நடிக்கச் சேர்க்கத்தான் அழைத்து வந்தேன்.”
அல்லியின் திகைப்பு அடங்குவதற்குள், நெடிதுயர்ந்து, பருத்த பிரமுகர் ஒருவர், தம் தங்கப் பல் தெரிய, பெரிய ஹாஸ்ய நிகழ்ச்சியைக் கண்டவர் போல் சிரித்து, அவர்களை வரவேற்றார்.
உள்ளமும், உடலும் பதைக்க, உள்ளே செல்வதா, வேண்டாமா என்று திகைத்தவாறு, அல்லி காரின் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.