தீபம்
83
கார்த்திகைக்கு மறுநாள் வெகு வேகமாகவும், விதம் விதமாகவும் கிளம்பிய வம்புப் புழுதி காலக் கிரமத்தில் தானாகவே அடங்கிவிட்டது. மாங்குடி மண் எப்போதும் போல் வெயிலிலும் நிலவிலும் மாறி மாறிக் குளித்து வந்தது.
இன்னாசியும், சிங்கப்பூரானும் ஆஸ்பத்திரியிலிருந்து விடுதலை அடைந்து வந்தனர்.ஒன்றும் அறியாத வேஷம் போட்டனர். யாரோ திருடர்கள் இருவரையும் தாக்கிப் பணப்பையைப் பறித்துப் போனதாகக் காயத்துக்கு ஒரு காரணம் கற்பித்தனர்.
விளக்குகள் அணைந்த வேகத்தில், வெண்திரையில் காட்சிகள் ஓடலாயின. -
கதையில் சிந்தை செலுத்திய இன்னாசியும் சிங்கப்பூரானும் கண்களை எடுக்காமல் கவனித்தனர். திரைப் படத்தில் ஒரு நாட்டிய நாடகம்.
வண்ணானின் சொற்கேட்டு, சீதையை அபராதியாக்கிக் காட்டுக்கு மீண்டும் அனுப்பிய கட்டம். வால்மீகி ஆசிரமம்; லவகுசர் பிறப்பு.
உத்தர ராமாயணக் காட்சிகளை நாட்டிய நாடகமாக உருவகப்படுத்தியிருந்தனர் படத் தயாரிப்பாளர்கள். மாங்குடி அல்லிதான் சீதையாகத் திரையில் மின்னினாள். இன்னாசி மீசையை உற்சாகத்துடன் தடவிக்கொண்டான்.
சிங்கப்பூரானைத் திரும்பிப் பார்த்த அதே வேளையில் சிங்கப்பூரானும் இன்னாசியைப் பார்த்தான். ‘நானும் கவனித்து விட்டேனடா பயலே! என்ற பாவனை அதில் நன்கு தெரிந்தது.