உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



94

ஆடும்\


எதிரில் போய் நின்ற போது, அவனுடைய சுருண்ட கேசம் கலைந்து கிடந்தது; முகம் வெளிறியிருந்தது. கண்கள் கனலைப் போல் சிவந்து கிடந்தன. ராஜநாயகத்துக்கு, அவனுடைய நிலையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

“அருணாசலம் கவலைப்படாதேப்பா. அல்லிக்கு ஒன்றுமில்லை,” என்றார் அவர், தைரியம் சொல்லும் பாவனையில். அவர்களிடையே இருக்கும் பரஸ்பர அன்பை எண்ணிய போது, அவர் மனம் உருகத்தான் செய்தது.

“கல்யாணத்துக்கு நாள் ரொம்ப கிட்ட நெருங்கி வந்து விட்டதே. அல்லிக்கு அதுக்குள்ளே சௌக்கியமாகுமா என்கிற கவலை உனக்கு இருக்கத்தான் இருக்கும் அருணாசலம். கல்லெறி படலாம்; கண் எறியிலிருந்து தப்பிக்க முடியாதப்பா. அல்லியைப் பற்றி ரொம்ப பேருக்குப் பொறாமை. அதுவும் அவள் படத்திலே நடிச்சதிலிருந்து கேட்கவே வேண்டாம்.” என்று சொல்லிக் கொண்டே வந்த போது, அருணாசலம் குறுக்கிட்டான்;

“போதும் வாத்தியாரையா, அல்லிக்கும் எனக்கும் கல்யாணம் வேண்டாம்… …!”

ஒரு க்ஷண காலம் உலகத்தில் உள்ள உயிர்களெல்லாவற்றினுடைய மூச்சுக்களும் நின்று விட்டன போன்ற பேரமைதி அங்கே ஏற்பட்டது. நடப்பது கனவல்ல என்றறியவும், சிறிது அவகாசம் வேண்டியிருந்தது. அறிந்து கொண்டதும், உள்ளத்தில் ஆத்திரக் கடல் குமுறியது. எரிமலையின் கற்களென வெடித்துச் சிதறின வார்த்தைகள்; “என்னப்பா, குழந்தை விளையாட்டா விளையாடறே?” என்றார் ராஜநாயகம். ‘தந்தை மனம்’ வெடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/95&oldid=1686008" இலிருந்து மீள்விக்கப்பட்டது