பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

99

ஆனால் இந்த மனைவியரை அடையும் முன்பே அல்லவா, மணம் ஆகாத அந்த இளவயதிலேயே அல்லவா முருகன் பால சந்நியாசி ஆகிவிடுகிறான்.

தமிழ் நாட்டு அறிஞன், அந்தப் பொய்யில் புலவன் வள்ளுவன் சொன்னான், இவ்வுலகில் இருக்கும் துன்பங்களில் இருந்தெல்லாம் விடுபடவேண்டுமானால், இவ்வுலகத்தில் நாம் உடைமை என்று கருதுகின்ற பொருள்களில் உள்ள ஆசையை எல்லாம் விட்டு விடவேண்டும்; அப்படி ஆசையை விட விடத்தான், பெற வேண்டிய பேறுகளை எல்லாம் பெறலாம் என்று.

வேண்டின் உண்டாகத்
துறக்க, துறந்தபின்
ஈண்டு இயற்பால் பல

என்பது தானே அவன் சொன்ன அருமையான குறள். உண்மைதானே. உலக மக்களுக்கு எல்லா நன்மைகளையும் பேறுகளையும் அளிக்க விரும்பும் நாயகன், அந்த உலகத்து உடைமைகளிலேயே, பேறுகளிலேயே தானும் ஆசை வைத்து அதில் திளைத்து நின்றால் எப்படிப் பக்தர்களுக்கு அருள் செய்ய இயலும். ஆதலால் அவன் உடைமைகளை எல்லாம் துறக்கிறான், மக்களுக்கு எல்லாம் அவர்கள் வேண்டிய பேறுகளை எல்லாம் அளிப்பதற்காகவே.

அவன் முற்றத் துறந்து கோவணாண்டியாக நிற்பதினாலேதான், நாம் பெறற்கரிய பேறுகளை எல்லாம் பெற முடிகிறது. அவன் துறவியானது நம்மை எல்லாம் துறவிகளாக்க அல்ல, ஆக்கம் உடையவர்களாக, அருளுடையவர்களாக ஆக்கத்தான். மக்கள் வாழ்வதற்காகவே ஆண்டவன் துறவுக் கோலம் பூணுகிறான். இல்லாவிட்டால் அவனுக்குப் பற்று, துறவு என்றெல்லாம் உண்டா?