பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

113

கீதம் இனிய குயிலே!
கேட்டியேல் எங்கள் பெருமாள்
பாதமிரண்டும் வினவிற்
பாதாளம் ஏழினுக்கப்பால்
சோதி மணிமுடி சொல்லில்
சொல்லிறந்து நின்ற தொன்மை
ஆதிகுணம் ஒன்றும் இல்லான்
அந்தமிலான் வரக்கூவாய்

என்று குயிலுக்கு வேண்டுகோள் விடுகிறபோது இறை உணர்ச்சி மணிவாசகரது உள்ளத்தில் நிறைந்திருக்கும் பான்மையை உணர்கிறோம். தில்லையில் மணிவாசகர் பெற்ற அனுபவம் எல்லாம் இப்பாடல்களில் விளங்கக் காண்கின்றோம். மணிவாசகர் கண்ட தில்லை அவருக்கு மாத்திரம் அல்ல, திருவாசகம் படிக்கும் நமக்கெல்லாமே ஓர் அற்புத அனுபவமாகவே அமைகிறது.

தாய் நாடான தமிழ் மக்கள் இந்தத் தில்லையாம் சிதம்பரத்தை நினைந்து நினைந்து மகிழ்ந்தால், சேய் நாடான ஈழத்து மக்களும் காரை நகர் என்னும் ஈழத்துச் சிதம்பரத்தை நினைந்து நினைந்து மகிழலாம்தானே. அங்கு நடக்கும் திருவெம்பாவை விழா, மணிவாசகர் விழா எல்லாம் ஈழத்தில் நிலைத்திருக்கும் சைவ உணர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது என்று நான் சொன்னால் அது மிகையாகாதல்லவா.

ஆ.பெ.அ.நெ-8