பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

33

இன்னுமொரு திருவுருவம் ஹேரம்ப கணபதி என்ற பெயரோடு. இவரையே பஞ்சமுக விநாயகர் என்று அழைக்கிறார்கள் மக்கள். ஒற்றை முகமும், ஒரு கோடும் உடையவர், மூஷிக வாகனத்தில் சவாரி என்றால், ஐந்து முகமும் அதற்கேற்ற கரங்களும் உடையவர் ஏறிச் சவாரி பண்ண வேண்டுவது சிம்ம வாகனத்தில் தானே? இந்தத் திருவுருவத்தை எல்லா இடத்திலும் காண்பது இயலாது. செப்பு விக்கிரக உருவில் ஒன்றிருக்கிறது. நாகப்பட்டினம் நீலாயதாகூஜி அம்மன் கோயிலிலே. இந்தத் திருவுருவங் களோடு வைத்து எண்ணப்பட வேண்டியவரே பிள்ளையார் பட்டிப் பிள்ளையார்.

பிள்ளையார் பட்டியில் அமைந்துள்ள விநாயகர் திருவுருவத்துக்குச் சில சிறப்பியல்புகள் உண்டு. இங்குள்ள விநாயகரது துதிக்கை வலம் சுழித்து, அவருக்கு வலம்புரி விநாயகர் என்ற பெயரைத் தேடித் தருகிறது. எல்லா இடத்தும் நான்கு திருக்கரத்தால் நான்கு திக்கிலும் ஆட்சி செய்பவர், இங்கு இரண்டே திருக்கரத்தால் விண்ணையும் மண்ணையும் ஆட்சிக்குள் கொண்டு வந்து விடுகிறார். அங்குசமும் பாசமும் இல்லாமலே அடியவரை ஆட்சி கொள்ளும் சக்தி உடையவராக இருக்கிறார். வயிற்றை ஆசனத்தில் படியவிடாமல் அர்த்த பத்மாசனத் திலேயே கால்களை மடித்திருக்கச் செய்து கொள்கிறார். வலக் கரத்தில் மோதகம் தாங்கி, இடக்கரத்தை இடையில் பொருத்தி பெருமிதத் தோற்றத்தோடு காட்சி கொடுக்கிறார். ஆம், ஆதிநாளிலே இப்படி இரண்டு திருக்கரத்தோடு உருவானவர்கள் தான், பின்னர் நான்கு திருக்கரங்களோடு எழுந்து நின்று, நடந்து நடமாடி மூவிகத்திலும், சிம்மத்திலும், ஏறிச் சவாரி செய்பவராகக் கலைஞன் சிந்தனையிலே வளர்ந்திருக்கிறார்.

ஆ.பெ.ஆ.நெ-3