பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



72

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலியில் இருப்பவளே வடிவன்னை, அவள் தன் பெயருக்கு ஏற்ப சிறந்த வடிவுடையவளாகவே உருப் பெற்றிருக்கிறாள். கருவறையில் நிற்கும் அந்த வடிவன்னையை எட்ட இருந்து காண்பதாலும் அவள் வடிவு முழுவதையும் ஆடை அணியால் மறைத்துக் கொண்டிருப்பதாலும் அவளது அழகு முழுவதையும் கண்டு மகிழ்வது சாத்தியமில்லாது போய் விடுகிறது என்றாலும் கலைஞர்கள் நம்மைச் சும்மா விட்டு விடுவார்களா?

அவளையே அழகு உரு செப்பு சிலா வடிவிலும் நிறுத்தியிருக்கிறார்கள். கம்பீரமான தோற்றத்தோடு அவள் நிற்கும் ஒயில் மிக மிக அழகானது. அவளையே காண்கிறீர்கள் பக்கத்திலே. இரண்டே திருக்கரங்களோடு அமைக்கப்பட்டிருந்தாலும் அவளது வடிவில் தாய்மையையும் இறைமையையும் சேர்ந்தே படைத்து இருக்கிறான் கலைஞன். இவனைத் தரிசிக்க சென்ற கலைஞன் அவளிடமே ஒரு சிபாரிசு கேட்கிறான். பலமுறை நெல்வேலி நகரில் சந்நிதிக்குச் சென்று குறைகளையெல்லாம் பன்னிப் பன்னிச் சொல்லியும் கேளாது அந்த அப்பனிடம் சிபாரிசு செய்யச் சொல்கிறான். ஏதோ பணிந்து துணிந்து கூறுபவனாக இல்லை. கொஞ்சம் மிடுக்குடனேயே அவளுக்கே சவால் விட்டுக் கேட்கிறான். அத்தனை மிடுக்கு உரிமை உடையவன் தானே கவிஞன். அவன் கேட்கும் கேள்வி இதுதான்.

ஆய் முத்துப்பந்தரின் மெல்லணை மீது
உன் அருகிருந்து
நீமுத்தம் தா என்று அவர்
கொஞ்சும் வேளையில் நித்த நித்தம்
வேய் முத்தரொடு என் குறையை
எல்லாம் மெல்ல மெல்லச் சொன்னால் உன்}}