பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



76

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

அவனுக்கு எல்லா சக்திகளும் அருளுபவளாக போக சக்தியும் இருப்பாள்.

சில இடங்களில் நின்ற கோலத்திலும், சில இடங்களில் இருந்த கோலத்திலும் எல்லாம் தலை சிறந்த சக்தியாக இருப்பவள் தான் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள போக சக்தி. அவள் இருக்கின்ற ஒய்யாரம்தான் என்ன! ஒரு காலை மடக்கி, ஒரு காலைத் தொங்க விட்டு, கையை அபயகரமாக வைத்து நம்மை எல்லாம் தன் பக்கம் அழைத்து அருள் புரிபவளாக அல்லவா இருக்கிறாள். வயிற்றில் உள்ள மடிப்புகள் எல்லாம் அவள் எண்ணரிய பிள்ளைகளைப் பெற்றவள் என்றல்லவா கூறுகின்றன.

கலை உலகில் கம்பீரமாகக் கொலு வீற்றிருக்க வேண்டிய இவள் சிறிய வடிவிலே பெரு உடையார் கருவறையிலே ஒரு பக்கமாக ஒதுங்கியே உட்கார்ந்திருக்கிறாள். அங்கு சென்றால் அர்ச்சகரிடம் கேட்டு அவள் இருக்கும் இடத்தைத் தேடி தரிசிக்க மறந்து விடாதீர்கள்.

இப்படியே எத்தனை எத்தனை அன்னையரையோ நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். உலகெல்லாம் புரக்கின்ற இந்த அன்னையையே கன்னியாகவும் கண்டிருக்கிறார்கள் கலைஞர்கள். மனிதனுக்கு இம்மையில் வாழ்வு அளிக்க தாய்மை உருவில் தோன்றியவள், மறுமையிலும் அருள் புரிய கன்னி வடிவிலே தவக் கோலம் கொண்டு நிற்கிறாள்.

அவள் இறைவனோடு தொடர்பு கொள்ளும் உறவு உணர்விற் கலந்த உறவாக இருப்பதனாலேயே கன்னித் தன்மை அழியாமலே தாய்த் தன்மை பெறுகிறாள். அகிலாண்ட கோடி ஈன்ற அன்னை தான் என்றாலும் பின்னையும் கன்னி என மறை பேசும்