பக்கம்:ஆண்டாள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

ஆண்டாள்


வைகறை நேரம்; வீட்டின் பின்புறத்தே தோட்டம்; அங்கே ஒரு குளம்; அக்குளத்தில் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்கின்றன; அதே நேரத்தில் ஆம்பற் பூக்கள் வாய் குவிகின்றன. செங்காவி உடையுடுத்திய வெண்பற்களையுடைய தவச் சிரேட்டர்கள் தங்கள் திருக்கோயிலுக்குச் சங்கு முழக்கம் செய்யப் போகின்றார்கள் எங்களை முன்னதாக எழுப்புவதாக வீண் பெருமை பேசும் பெண்ணே! வெட்கமில்லாதவளே! இனிக்க இனிக்கப் பேசும் நாக்கையுடையவளே! சங்கு சக்கரம் ஆகிய இவற்றைத் தன்கைகளிலே ஏந்தி நிற்கும், நீண்ட கைகளையுடைய கமலக் கண்ணனைப் பாட வேண்டும், எனவே எழுந்திருப்பாயாக!

இப்பாடலில் இயற்கைப் பொருள்களை உடலாகவும், அவற்றின் அழகை உயிராகவும். அவற்றினுள் இருக்கும் இறைவனை உயிருக்கு உயிராகவும் காணலாம். ஆண்டாள் பாசுரங்களில் சொற்பொருளினும் குறிப்புப்பொருளே விஞ்சி நிற்கும் என்னும் பெரியோர் வாக்கு உண்மையாகும்.

இந்நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி பாரதியாரும்,

காக்கைச் சிறகினிலே நந்தலாலா! நின்றன்
கரிய நிறந் தோன்றுதையே, நந்தலாலா!!
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா! நின்றன்
பச்சைநிறத் தோன்று தையே நந்தலாலா;
கேட்டும் ஒலியிலெல்லாம் நந்த லாலா-நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

-நந்தலாலா பாட்டு

என்று கூறியிருக்கக் காணலாம்.

"நோக்குவ எல்லாம் அவையே போறல்' என்ற அகப் பொருள் வழக்குப்படி ஆண்டாளுக்குக் காணும் பொருளெல்லாம் கண்ணனாகவே தெரிகின்றன. மேலே கண்ட பாட்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/100&oldid=1462096" இலிருந்து மீள்விக்கப்பட்டது