பக்கம்:ஆண்டாள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

168


அருள்பாலித்தார்களில்லை. எனவே அவர்தம் நெஞ்சத்தினைப் பெரிதும் பிணித்துக் கவர்ந்த திருவரங்கத்துறை அம்மானைக் காணும் கருத்துடையவராகிறார் கோதையார். திருவரங் கத்துச் செல்வனைக் காமுறும் முறையில் பாடல்களை உவந்து உவந்து பாடுகின்றார். திருவரங்கத்தமுதனாரைப் பாடும் பொழுது அவர் உள்ளம் நெகிழ்ந்து இன்புறுகின்றது: உணர்ச்சிகள் உந்தித் தந்த பாடல்களைப் பாடி நிற்கிறார்.

"நல்ல அணிகலன்களை அணிந்துள்ள நங்கைமீரே! நான் மகிழ்ந்து தரித்துக் கொண்டிருக்கிற என் கையில் வளைகள்: அவர் உகந்து தரித்துக் கொண்டிருக்கிறதன் கையில் சங்கோடு ஒப்புமைப்படாவோ! பாம்பணைமேல் பள்ளிகொண்டு வாழும் அரங்கநாதன் எளியேனாகிய என் முகத்தை இரக்கத்தோடு நோக்குகின்றாரில்லை. ஐயோ! அந்தோ! அந்தோ' என்று அரற்றுகின்றார் ஆண்டாள்.

தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ,
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்!
தீமுகத்து நாகனைமேல் சேரும் திருவரங்கர்,
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே! அம்மனே!95

வாய் அள்ளுறித் தித்திக்கத் தித்திக்கத் திருவரங்கனைப் புகழ்ந்து பேசுகிறார் திருப்பாவை அருளிய செல்வியார். அவர் அரங்கத்து இன்னமுதராம்; குழலழகராம்; வாயழகராம்: கண்ணழகனார்; தாமரைப் பூவழகராம்; ஆனாலும் 'கழல்வளை' என்று இடுகுறியாற் பெயர் பெற்ற கைவளையை அவர் 'கழன்றொழி கிறவளை’ என்று காரணப்பெயர் பெற்றவளையாக ஆக்கிக் காட்டி விட்டாராம். ஆற்றாமை மீதூரப் பொங்கிப் பொங்கியெழும் சோகத்தில் மீறிட்டுக் கிளம்புகிறது பாடல்.

எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரே96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/165&oldid=1462166" இலிருந்து மீள்விக்கப்பட்டது