பக்கம்:ஆண்டாள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

ஆண்டாள்


கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்பில்
எறிந்தென் அழலைத் தீர்வேனே126

அடுத்த பாடல் அவலத்திற்கு மேல் அவலம் கூட்டி நிற்கிறது.

"என் கிளர்ந்து பருத்த மார்பகங்களினுடைய குமைச்சல் தீரும்படி கண்ணபிரானுக்கு அந்தரங்கமான கைங்கரியத்தை இந்தப் பிறவியிலே செய்யாமல் இந்தப் பிறவி கழிந்த பின்பு செய்யக் கூடியதான தவந்தான் எற்றுக்கு? செம்மையுடைய திருமார்பிலே என்னை அவன் சேர்த்துக் கொண்டானேயாகில் நல்லது; ஒருநாள் என்முகத்தைப் பார்த்து மெய்யே சொல்லி "நீ எனக்குவேண்டாம் போ' என்று தள்ளிவிட்டமை தோன்ற விடைகொடுப்பானாகில் அது மிகவும் உத்தமம்" என்கிறார் ஆண்டாள்.

கொம்மை முலைக ளிடர்தீரக்
கோவிந் தற்கோர் குற்றேவல்,
இம்மைப் பிறவி செய்யாதே
இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்
செம்மை யுடைய திருமார்பில்
சேர்த்தா னேனும் ஒருஞான்று,
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
விடைதான் தருமேல் மிகநன்றே127

நாச்சியார் திருமொழியின் இறுதியாக அமையும் "பட்டி மேய்ந்தோர்' எனத் தொடங்கும் பதினான்காந் திருமொழி விருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டமையைப் பகர்வதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/184&oldid=1462185" இலிருந்து மீள்விக்கப்பட்டது