பக்கம்:ஆண் சிங்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

வரும். தடால் என்றொரு சத்தம், ஒரு கணம் அமைதி: மீண்டும் சரசரப்பு...

இந்த விளையாட்டைக் கவனிப்பதில் கைலாசம் ஆர்வம் அதிகம் கொண்டான்.

அவன் பார்வையிலே கடல் இருந்தது. அவன் எண்ணத்தில் கடல் நிறைந்து, நினைவு முழுவதையும் பிடித்தது. அவன் கனவு பூராவும் அதுவே ஆயிற்று.

–அலைகள்...பொங்கி வரும் பேரலைகள்...ஆள் உயரத்துக்கு...வானத்துக்கும் பூமிக்குமாக உயர்ந்து விடும் அலைகள்... அலைக்குப் பின் அலைகள்... வருகின்றன; பாய்கின்றன. கடலுக்குள்ளேயே திரும்பாமல் முன்னேறி வருகின்றன. வேகமாக, ஆவேசமாக, பயங்கர இரைச்சலோடு...

எல்லோரும் பதறி அடித்து, விழுந்து எழுந்து, ஓடுகிறார்கள். ஆனால் கைலாசம் சிரிக்கிறான். கைகொட்டிச் சிரிக்கிருன்!

கைலாசத்துக்கு அதுவே வியாதியாகி விட்டது. அவன் கண்கள் சதா வெற்றிடத்தையே வெறித்து வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன. அவன் கற்பனையில் விந்தைக் கோலங்கள் பலப்பல தோன்றுவது மறைந்து, ஒரே ஒரு சித்திரம் தான் நித்தியமாய், நிரந்தரமாய் நிலைத்து நின்றது.

–அலைகள்... பொங்கி வரும் பேரலைகள் ... பேயலைகள்...

அவன் படித்துக் கொண்டிருக்கிருன். அதாவது, அவன் கையில் புத்தகம் இருக்கிறது. அவன் கருத்தில் அது பதியவில்லை. அவனுடைய செவிகள் ஒரு ஒசையைக் கிரகிக்கின்றன. மிகத் தெளிவாகக் கேட்கிறது அது. ‘தடால்’ என்று விழுந்து அழிந்து போகும் ஒலியல்ல. அலைகள் மேலே மேலே சாடிப் பாய்ந்து வருகின்றன.

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/45&oldid=1071150" இலிருந்து மீள்விக்கப்பட்டது