பக்கம்:ஆண் சிங்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


திடமனசோடு எண்ணினால், அந்த எண்ணத்தின்படி பலன் ஏற்படும்’ என்கிறார்களே. ‘பார்வை பார்த்த’ பெரியவரும் அத்தகைய ஆத்ம சக்தி பெற்றிருக்கலாம். மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக – ஒருவிதமான பயமும் பக்தியும் உண்டாக்குவதற்காக – தண்ணீர், பச்சை நிற பாட்டில், அதை மரப்பலகை மீதுதான் வைக்க வேண்டும் எனும் விதி என்றெல்லாம் அவர் ஒழுங்கு செய்திருக்கலாம்.

இவ்வாறு சிதம்பரம் பிற்காலத்தில் எண்ணியது உண்டு. எனினும் இதுதான் சரி என்று அவன் உள்ளம் துணிந்து சாதித்ததில்லை...

இந்த இரவில், தடித்த பூச்சியைக் கொன்று விட்டு, படுக்கையில் படுத்துக் கிடந்த போதும் அவன் அதைப் பற்றி எண்ணிஞன்.

முன்பு பார்வை பார்த்த பெரியவர் இறந்து எவ்வளவோ வருஷங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு சிதம்பரம் பல தடவைகள் சிலந்திப் பூச்சிக் கடியினால் அவதிப்பட்டது உண்டு. அச் சந்தர்ப்ப்ங்களில் எல்லாம் அவன் பெரியவரைப்போல் ‘மந்திரிக்கக்கூடிய ஆள் எவரையும் காண முடிந்ததில்லை. மேலும், பூச்சிக் கடியின் விளைவு சில தினங்களில் தானாகவே மறைந்து விடும்.

எனினும், அவன் உள்ளத்தில் சிலந்தி தனியொரு இடம் பெற்று நின்றது. நினைவாக வள்ர்ந்து அரித்துக் கொண்டிருந்தது. கனவிலும், நுண்ணிய இழைகளை ஓடவிட்டு வலை பின்னி அவன் மூளையில் பதிய வைத்தது. பித்தாய், பேயாய், படுத்தி வந்தது. கோளாறாய், குணக் கேடாய், வளர்ந்து அவனை ஆட்டிப் படைத்தது.

சிறு சிறு பூச்சிகளிலிருந்து பென்னம் பெரிய சிலந்திகள்வரை, பலரகமான் பூச்சிகள் சதா அவன் நினைவில் ஊர்ந்து கொண்டிருந்தன. எப்பவாவது ஏதாவது பூச்சி கடித்தாலும் கூட, சிலந்தி தான் கடித் திருக்கும் என்று நம்பி அவன் கஷ்டப்படுவது வழக்கம். ‘காணாக்கடி'யாக ஏதாவது அவனை கடித்துக்கொண்டு

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/80&oldid=1072845" இலிருந்து மீள்விக்கப்பட்டது