பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 221

ஜமீன்தாரின் அந்தக் கோடை வாசஸ்தலம் அமைந்திருந்த இடம் மனோரம்யமாக இருந்தது. மேற்கே மிக அருகில் மலைத் தொடரும், கீழ்ப்புறமும், வடக்கும், தெற்கும் சரிவில் ஜமீன் மாந்தோப்பும் அமைய, நடுவே மேட்டில் அமைந்திருந்தது அந்த பங்களா. கொஞ்சம் உடல் நிலை தேறியபின், தான் உலாவப் போகும்போது காலை மாலை வேளைகளில் மதுரத்தையும் காற்றாட அழைத்துப் போனான் அவன். அவளுடைய உற்சாகம் மெல்ல மெல்லத் திரும்பிக் கொண்டிருந்தது. டாக்டர் மதுரையிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்தார்.

ஒரு நாள் பகலில் ஜமீன்தாரிணி. ஏதோ காரியமாக நாகமங்கலம் ஊருக்குள் போயிருந்தாள். சமையற்கார ஆளிடம் எல்லாவற்றையும் எடுத்துத் தரச் சொல்லி வாங்கி மதுரமே அவனுக்குப் பகல் சாப்பாடு பறிமாறினாள். அவன் சாப்பிட்டு எழுந்திருந்து கைகழுவிவிட்டு வந்து பார்த்தால் அவன் சாப்பிட்ட அதே இலையில் உட்கார்ந்து எல்லாப் பண்டங்களையும் கைக்கெட்டுகிற தொலைவில் வைத்துக் கொண்டு தனக்குத் தானே பரிமாறியபடி சாப்பிடத் தொடங்கியிருந்தாள் அவள். அவன் அருகே போய் உட்கார்ந்துகொண்டு பரிமாறுவதில் அவளுக்கு உதவி செய்தான். இலையைப் பற்றிச் சிரித்துக் கொண்டே மெல்ல அவன் கேட்கத் தொடங்கிய போதே அவள் வெட்கப்பட்டு அவன் பக்கம் நிமிரவே இல்லை. யுகயுகாந்திரமாகக் கன்னி கழியாமலே இருந்துவிட்ட ஒருத்தி வாழத் தவிப்பதுபோல் அவள் வாழத் துடிப்பது அவனுக்குத் தெரிந்தது. அன்று பகலில் பெட்டியிலிருந்து வளைகளை எடுத்து அணிந்து கொண்டாள் அவள், மாலையில் உலாவப் போகு முன் தலைவாரிப் பூச்சூடி முடிந்து கொண்டாள். அன்று மாலை அவளை மலையடிவாரத்து அருவிக்கரை வரை அழைத்துச் சென்றான் அவன். மழைக்காலம் முடிந்து அன்று அபூர்வமாகப் பகல் முழுவதும் நன்றாக வெயில் காய்ந் திருந்தது. பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் மண்ணின் இடைவெளி தெரியாது மலைச்சரிவில் புல்வெளி செழித்திருந்தது. அருவியின் தண்ணீரில் அளவு குறைந்