பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 241 மகாத்மாவின் உண்ணாவிரதம், நாள் கணக்கில் நீடித்தது.

எல்லாத் தலைவர்களும் வாக்குறுதி அளித்து மகாத்மா

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி செய்தார்கள்.

பிரார்த்தனைகளும் கூட்டங்களும் நடந்தன. மக்கள் வெள்ளமாகக் கூடினார்கள். வைஷ்ணவ ஜனதோவும்

ரகுபதிராகவ வும் இலட்சக் கணக்கான செவிகளில் ஒலித்துச்

சாந்தியளித்தன.

ஜனவரி மாதம் இருபதாம் தேதி மகாத்மாவின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட செய்தியை அறிந்து ராஜாராமன், அந்தச் செய்தி தெரிந்த வேளையிலிருந்து அன்ன ஆகாரமின்றி மலைத்துப் போய் உட்கார்ந்து விட்டான். காரணமின்றி அவன் மனம் கலங்கியது. கீதையை எடுத்து வாசித்து ஆறுதல் பெற முயன்றான். அப்போது பிருகதீஸ்வரனும் புதுக்கோட்டை போயிருந்தார்.

உலகில் கெட்டவர்களுக்குத்தான் எதிரிகளும் பகைவர்களும் இருப்பார்கள் என்று அவன் இது வரை எண்ணியிருந்தான். இப்போதோ மகான்களுக்கும், நல்லவர்களுக்கும் கூட எதிரிகள் இருப்பார்களென்று நிதரிசனமாகத் தெரிந்தது. எந்த மகானின் விரதங்களால் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா சுதந்திரம் அடைந்ததோ, அந்த இந்தியாவிலேயே மகாத்மாவின் பிரார்த்தனைக் கூட்டத்திலே வெடிகுண்டு வீசவும் ஒருவன் இருப்பான் என்பது நினைக்கவும் கூச வேண்டிய விஷயமாயிருந்தது. கங்கையும், வேதங்களும் பிறந்த நாட்டில் கருணையும், அன்புமாக வாழ்கிறவர்களின் உயிருக்கு உலை வைக்கும் கொடியவர்களும் பிறந்திருக்கமுடியும் என்பதையே இப்போது தான் அநுமானிக்க முடிந்தது. மகாத்மாவுக்காகத் தெய்வங்களைப் பிரார்த்தித்துக் கொண்டான். அவன்.

ஆ.ரா - 16