பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - ஆத்மாவின் ராகங்கள் அவனை சி வகுப்பில் தள்ளினார்கள். 'பி'யிலும் 'சி'யிலும் இருந்த பல தேசத் தொண்டர்களைப் பார்த்தபோது அவனுக்குத் தன் இனத்துக்கு நடுவே வந்து சேர்ந்து விட்டோம் என்று பெருமையாயிருந்தது. மன நிம்மதியும் ஏற்பட்டது.

அங்கிருந்த அனைவருமே தாய், தந்தை, குடும்பம், மனைவி மக்கள், பந்தபாசம் எல்லாவற்றையும் விட்டு விட்டுத் தேசத்தை விடுவிப்பதற்காக இப்படி வந்து வாடுகிறார்கள் என்பதை நினைத்தபோது ஒரு பெரிய தாயின் வேதனைக்காகத் தன் தாயைப் போல் எங்கெங்கோ பல சிறிய தாய்மார்கள் வேதனைப்படலாமென்று எண்ணி ஆறுதலடைய முடிந்தது. முத்திருளப்பனையும், குரு சாமியையும் எங்கே கொண்டு போயிருப்பார்களென்று அவனால் அனுமானிக்க முடியவில்லை. ஒரு வேளை கடலூருக்குக் கொண்டு போயிருக்கலாம். அல்லது திருச்சிக்குக் கொண்டு போயிருக்கலாம்; நாகபுரிக்கோ, பெல்லாரிக்கோ, கொண்டு போயிருக்க அவ்வளவு தீவிரமான காரணம் இல்லையென்றே தோன்றியது. அவர்களை விடப் பெரிய காரணங்களுக்காகக் கைதானவர்கள் எல்லாம் கூட வேலூர் ஜெயிலில் தான் இருந்தார்கள். ஜெயிலில் கொடுத்த கேழ்வரகுக் களி முதல் தடவை அவனுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. அமிர்தத்தையே உண்ணும் தகுதியுள்ள பெரிய பெரிய தலைவர்களும் அங்கே இதைத்தான் சாப்பிடுகிறார்கள் என்று எண்ணியபோது, ருசிகளைக் கட்டுப்படுத்த முயன்றான் அவன். கூட இருந்தவர்களில் ஒருவர் வேதாரணியம் உப்புச் சத்தியாக்கிரகத்தில் கைதானவர். அவரிடம் வேதாரணியம் நிகழ்ச்சிகளை விவரித்துச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிற அனுபவமாக இருந்தது. நடுத்தர வயதினரான அவர் ஒரு கீதைப் புத்தகம் வைத்திருந்தார். மாலை வேளையில் சிறிது நேரம் அவரைக் கீதைக்குப் பொருள் சொல்லச் செய்து கேட்டான் ராஜாராமன். அது மனதுக்கு ஆறுதலளிப்பதாயிருந்தது. ---