பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை - 197 ஆசிரியர் அனைவருக்கும் அதை அளித்தேன். ஓர் இதழை உறையிலிட்டு என் அன்னையாருக்கு அனுப்ப ஏற்பாடு செய் தேன். என்னுடன் எங்கள் ஊரிலிருந்து வந்து பணியாற்றிய அன்பர் ஒருவர்வழி அதைக் கொடுத்தனுப்பி, அன்று மாலையே புறப்படுவதாகச் சொல்லி (மணம் மூன்றாம்நாள்) அன்பர்கள் தந்த பண உதவியோடு மாலை 4-30க்குப் புகை வண்டியில் செங்கற்பட்டை நோக்கிப் புறப்பட்டேன். அங்கே சென்று தெற்குநோக்கிச் செல்லும் வண்டியில் எது முந்தியது எனக்கண்டு அது பொழுது விடியும்போது எங்கே செல்லும் என்று அறிந்தேன். திருவனந்தபுரம் விரைவு வண்டிக்குத் திண்டுக்கல்லுக்கு ஒரு டிக்கெட் எடுத்தேன். இரவெல்லாம் அந்த ரெயிலில் சென்றேன். அந்தக்காலத்தி லெல்லாம் இப்படி வழியும் கூட்டம் ரெயிலில் கிடையாது. எனவே நன்கு உறங்கித்தான் சென்றதாக நினைப்பு. திண்டுக்கல் சென்றதும் இறங்கினேன். எனக்கு அந்த ஊர் புதியது. இரெயிலடியிலேயே பல்லைத் துலக்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த விடுதியில் சிற்றுண்டி கொண்டேன். பிறகு ஒரு அனாதைப் பிள்ளையைப் போன்று, கையில் வைத்திருந்த சிறு பையுடன் மேற்குநோக்கி வெகுநேரம் நடந்தேன். ஏன் போகிறேன்? எங்கே போகிறேன்? என எனக்கே தெரியவில்லை. சுமார் 10 மணிவரை நடந்திருப்பேன். பின் சாலையின் ஓர் ஒரத்தில் தங்கிவிட்டேன். ஒருவேளை என் பெற்றோர் என்னைத் தேடிக்கொண்டு வந்தாலும் அவர்கள் கண்களில் படாதிருக்கவேண்டியே இந்த ஏற்பாட்டினைச் செய்தேன். பிறகு அன்றைப்பொழுதை எப்படிக் கழித்தேன் என்பது எனக்கு இன்று திட்டமாக நினைவில் இல்லை. எப்படியோ அன்றைப்பொழுதை அறியாத திண்டுக்கல்லில் கழித்து, இரவு 9 மணியளவில் திருச்சிக்குத் திரும்பும் ஒரு ரெயிலில் திருச்சி வந்து சேர்ந்தேன். அங்கேயும் ரெயிலடியிலேயே படுத்து உறங்கினேன். மறுநாட் காலை எழுந்து காவிரியில் சென்று மூழ்கிப் பையில் இருந்த மாற்றுடையைத் தரித்துக்கொண்டு,