பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

 (3) இக்காலத்தில் உயிர்க்கு ஆபத்து எப்போது நேருமென்று தெரியாதாகையால் குடும்பநலனைப் பாதுகாப்பதற்காகவும், இக்காலத்தில் சேமித்து வைக்க முடியாத அளவு பணச் செலவு அதிகமாவதால் முதுமைக் காலத்தில் கஷ்டப்படாதிருப்பதற்காகவும் ஒவ்வொருவரும் ஆணும் பெண்ணும் இன்ஷூர் செய்வது அவசியம்.

இந்த மூன்று யோசனைகளையும் கேட்பவர்கள் பெரும்பாலும் உடற்பயிற்சி யோசனை பற்றியும் இன்ஷூரன்ஸ் யோசனை பற்றியும் சந்தேகம் எதுவும் கேட்பதில்லை. ஆப்பரேஷன் யோசனை பற்றியே கேட்கிறார்கள்.

ஆப்பரேஷன் என்பது உடலில் அறுப்பதாயிருப்பதால் யாரும் அஞ்சக்கூடியதுதான். ஆப்பரேஷன் செய்யும்படி கூறுகிறீர்களே, அதனால் அபாயம் ஒன்றும் ஏற்படாதா என்று கேட்கிறார்கள். இந்த ஆப்பரேஷன் மிகவும் சிறியது, மயக்க மருந்து எதுவும் கொடுக்கவேண்டியதில்லை. ஏதேனும் சொத்தைப் பல்லைப் பிடுங்கும்போது நோவு தெரியாமலிருப்பதற்காக அந்த இடத்தில் சிறிது மருந்தை ஊசி குத்தி வைப்பது போல் ஊசி குத்தி வைத்துக்கொண்டு அறுப்பார்கள். 15 நிமிஷ நேரத்தில் ஆப்பரேஷன் செய்து கட்டுக் கட்டி விடுவார்கள். அப்போதும் நோவு தெரியாது.

ஆப்பரேஷன் நடந்தபின் படுத்திருக்க வேண்டியதில்லை. மெதுவாக நடந்து வந்து வண்டியில் ஏறி வீட்டிற்கு வரலாம். வீட்டிலும் மெதுவாக நடக்கலாம். பாரங்களைத் தூக்கக்கூடாது. மூன்று நாட்கள் வீட்டில் ஓய்வுகொள்ள வேண்டும். பத்தாம் நாள் மருத்துவர் நூலை உருவி விடுவார். அவ்வளவுதான். ஆதலால் இந்த' ஆப்பரேஷன் செய்வதில் எவ்வித அபாயமுமில்லை ; கஷ்டமுமில்லை.