பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சுகமாய் வாழ
மூன்று குழந்தைகள் போதும்


நமது இந்திய நாடு இரு நூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்க்கு அடிமையாகி எங்கும் காண முடியாத வறுமையில் ஆழ்ந்து வாடியது. காந்தியடிகள் போதனையின்படி காங்கிரஸ் மகாசபை செய்த பெரு முயற்சியின் காரணமாக இந்திய மக்கள் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ம் நாள் சுதந்திரம் பெற்றார்கள்.

இந்திய மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புவது போலவே சுகமாக வாழவும் விரும்புகிறார்கள். அதற்கு வறுமை ஒழிய வேண்டும்; வருமானம் பெருக வேண்டும். அவ்வாறு செய்வதற்காக அரசாங்கத்தார் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்து அரும்பாடுபட்டு வருகிறார்கள்.

ஆயினும் அவற்றால் நன்மையை உடனே பெற்று விடமுடியாது. பல ஆண்டுகள் செல்லும். அதுவரை ஒவ்வொருவரும் தம்முடைய சக்திக்கும் சமய சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட அளவு வருமானமே தேட முடியும்.

அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு தாயும் தந்தையும் ஒருவாறு அதிகக் கஷ்டமின்றி வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டிய வழிகளை வகுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வகுத்து வாழ்க்கையைச் சுகமாக நடத்த விரும்புகிறவர்கள் மூன்று காரியங்கள் செய்ய வேண்டும்.