ஊர் எல்லையில் காம்பவுண்டுச் சுவரில் தெரிந்த போஸ்டரில் ---
"ராஜபார்ட் ரங்கதுரை, கோமாளி சாமண்ணா, ஜில் ஜில் ரமாமணி ஆகியோர் நடிக்கும், 'வள்ளித் திருமணம்' ஸ்பெஷல் நாடகம். காதர் பாட்சா கால் ஆர்மோனியம். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும். ஆட்ட காலகட்டத்தை அனுசரிப்பதேமுறை" என்று கொட்டை எழுத்துக்கள் உரத்துக் கூறின.
பாகவதர் மாதிரி ஜில்பாக் குடுமியுடன் கோமாளி சாமண்ணா கோணங்கித்தனமாக அந்த போஸ்டரில் சிரித்துக் கொண்டிருந்தான்.
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவன் தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலத் தோன்றியதும் பாப்பாவுக்கு. அவள் வெட்கத்தோடு சிரித்துக் கொண்டாள். 'ஐயே, மூஞ்சியைப் பாரு!'
சாலையோர வயல்களில் கரும்புச் சாகுபடி நடந்து கொண்டிருந்ததால் வெல்லப்பாகு வாசனை மூக்கைத் துளைத்தது.
"அப்பா, கரும்புச்சாறு குடிக்கணும் போல இருக்கப்பா. கொடுப்பாங்களா?"
"வாங்கிட்டு வாரேன் கண்ணு."
வண்டி முழுதும் பச்சைப் புற்களை அடர்த்தியாய்ப் பரப்பி அதன் மீது சாயம் போன ஜமுக்காளத்தை விரித்திருந்தான் குமாரசாமி,