பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 111

இராமனும் சீதையும் முதல் முதலாகக் கண்டுகொண்ட போது, சீதை இராமனின் தோள்களில் கண் பார்வையைச் செலுத்தியதாகக் கூறப்பட்டுள்ளமையும் ஈண்டு எண்ணத் தக்கது. வஞ்ச மகள்:

ஒருதலைக் காமமாகச் சூர்ப்பணகை இராமன்மேல் காதல் கொண்டாள்; அரக்கி உருவுடன் சென்றால் இராமன் ஏற்க மாட்டான் என எண்ணி அழகிய கன்னிப் பெண் உரு கொண்டு இராமனை நோக்கி வந்தாள்:

தாமரை மலர்போன்ற சிறிய அடிகளைக் கொண்டு, மொழி பேசும் மயில் போலவும், அன்னம் போலவும், கொடி போலவும், நஞ்சு போலவும், வஞ்சனையுடையவளாகி வந்தாள் என அவளது இயல்பு கூறப்பட்டுள்ளது: "பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்

செஞ்செவிய கஞ்சகிமிர் சீறடிய ளாகி அஞ்சொல் இளமஞ்ஞையென அன்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்” (31) பல்லவம் = தளிர். கஞ்சம் = தாமரை. மஞ்ஞை = மயில், தாமரை அனைய சிறிய அடிகளைக் கண்டு, செம்பஞ்சும் குளிர்ந்த தளிரும் தாம் ஒப்பாக முடியாமைக்கு வருந்தினவாம்.

மொழி பேசும் மயில் போன்ற சாயலும் அன்னம் போன்ற அழகிய நடையும் உடையவளாய் வந்தாளாம். சூர்ப்பனகை மொழி பேசக் கூடியவள் ஆதலின், இல்லாத பொருளாகிய மொழி பேசும் மயில் ஒப்புமையாக்கப் பட்டிருப்பது இல் பொருள் உவமை அணி எனப்படும்.

உருவத் தோற்றத்தில் கொடி போன்று இருந்தாளாம். அதாவது, பருத்த அரக்கியர் வடிவை நீக்கிப் பூங்கொடி போன்ற தோற்றத்துடன் அசைந்து அசைந்து வந்தாளாம்.