பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் ) 231

உண்டை = மண் உருண்டை. யானையின் மேல் மண் உருண்டையை வீசி அடித்து வெல்ல முடியுமா? கடு = நஞ்சு. நஞ்சு உண்டால் உயிர் நிலைக்குமா? சோதித்துப் பார்க்கச் செய்வது போல் தோன்றுகிறதாம்.

இந்தப் பாடலில், இராமன், சீதை என்னும் பெயர்களோ, இராமனோடு போர் புரிதல், சீதையை எடுத்துச் செல்லுதல், அவர்களால் அழிதல் என்னும் செயல்களோ வெளிப்படையாய்க் கூறப்படவில்லை.

கருதிய பொருளை விளக்குவதற்கு ஒத்த பொருளும் செயலும் கூறப்பட்டுள்ளன. அதாவது, இராமன் யானை; மண் உருண்டை எறிதல் = இராமனைத்துன்புறுத்தச் சீதையை எடுத்துச் செல்லுதல்; நஞ்சு உண்டால் அழிதல் = சீதையை எடுத்துச் சென்று இராமனைப் பகைத்துக் கொள்ளின் மாளுதல் - என்ற செய்திகள் ஒப்புமை வாயிலாகவே விளக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, சொல்லக் கருதிய பொருளைத் தொகுத்து அதை விளக்குவதற்கு ஒத்த பொருளை உரைக்கும் அமைப்புக்கு 'ஒட்டு அணி என்று அணியிலக்கண நூலார் பெயர் கூறுவர். இதனைத் தண்டியலங்காரத்தில் உள்ள - “கருதிய பொருள் தொகுத்து அது புலப்படுத்தற்கு ஒத்தது ஒன்றுரைப்பின் அஃதுஒட்டு எனமொழிப'

(52) இது உவமை போன்றிருத்தலின் இதனை உவமைப் போலி அணி எனவும், ஒன்றை மொழிதற்குப் பதிலாக அதனோடு ஒத்த பிறிதொன்றை மொழிதலால் பிறிது மொழிதல் அணி எனவும், செய்தியை வெளிப்படையாக நுவலாமலேயே (சொல்லாமலேயே) குறிப்பாகச் சொல்லுதலால் நுவலாநுவற்சி அணி என்றும் பெயர் கூறுவர்.