பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


போகட்டும்! அப்படிப் போய் எந்தப் பெண்பிள்ளைகளைக் கூப்பிடுவது? அவர்கள் என்ன, நோன்பு நோற்கவா போகின்றனர்? எந்த நோன்பென்று எந்த மத – மடத் – தலைவனாவது சொல்ல முடியுமா? வெட்கமும் – பொருளுங்கெட்ட இந்தச் செயலுக்காக எத்தனைப் பேர் காதுகளைப் புண்ணாக்குவது? அக்காலங்களில் பள்ளித் தேர்வுகளுக்காகப் படித்துக்கொண்டிருக்கும் எத்தனை மாணவர்களின் மனங்களை நோகச் செய்வது? பார்ப்பனப் பிள்ளைகள் எப்படியும் படித்துக் கொள்வார்கள்! நம் பிள்ளைகள் எப்படிப் படிப்பார்கள்! வாய்ப்பாகக் கிடைத்த அந்த முப்பது நாள் காலை நேரங்களையும் இப்படியா ஒலிபெருக்கிகளைப் போட்டுக் கொண்டு, தெருத்தெருவாக, மடம்மடமாக, கோயில்கோயிலாகக் கூத்தடிப்பது? இப்படி ஒலிபெருக்கியில் கூப்பிடச் சொல்லியா அந்த ஆண்டாளம்மாளும், மாணிக்கவாசகரும் பாடி வைத்தார்கள்? இலக்கிய வடிவான நூலமைப்பின் உட்பொருள் விளங்காமல் இப்படியா மதப்பித்தர்கள் பொருள்பண்ணிக் கொள்வது? பொருள் எப்படியோ போகட்டும்; தொலைந்து போகின்றது! அதற்காக, ஏன் ஒலிபெருக்கி வைத்து அதை எல்லாருடைய காதுகளிலும் போய்க் குத்தல் வேண்டும். அப்படிக் குத்தினவுடனே அவர்களுக்குப் பத்தி வந்துவிடுமோ? அதனால் படியரிசி இரண்டு உருபாவுக்குக் கிடைத்து விடுமா? பின், ஏன் இதுநாள் வரை கத்தி ஒன்றும் கிடைக்கவில்லை. இப்படி மதப்பித்தர்கள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி மக்களின் அமைதியைக் கெடுப்பதற்கு எந்தச் சட்டம் இசைவு தருகின்றது?

ஒலிபெருக்கியை எதெதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஓர் அளவு – எல்லை இல்லையா? பக்கத்து வீட்டுக்காரனுடைய இசைவு பெறாமல் ஒரு தொழிலுக்கான பொறியையே இயக்கக்கூடாது என்று இருக்கும்பொழுது, எல்லாருக்கும் துன்பந்தரும் ஒலிபெருக்கிகளை மட்டும் கோயில்களில் – தனிப்பட்ட ஒருவனின் திருமணக் கொம்மாளத்தில் – மட்டும் எப்படி வைக்கலாம். இஃது என்ன கொடுமை? இதற்கேன் அரசு நடவடிக்கை எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒருவனோ, ஒரு கோயில் அமைப்பாளர்களோ மகிழ்ந்தால் அவர்களைச் சுற்றியுள்ள அனைவரும் துன்பப்பட வேண்டும் என்பது தான் குடியரசோ? அமைச்சர்களுக்குத் தொல்லையில்லை. வெளிக்காற்றே புகாத அறைகளில் பகல்வரைக்குங்கூட அம் மாதத்தில் துங்கலாம். பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த ஆண்டாளும் மாணிக்கவாசகரும் ஒலிபெருக்கி வழியாகவும், வானொலி (இஃது ஒரு சாவக்கேடு – நம் நாட்டில்) வழியாகவும் எவ்வளவு தொல்லை கொடுக்கின்றனர். இதையேன் அரசு கவனிக்கக் கூடாது?