பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


பெரியாருக்குப் பின், அவர் அமைத்துக் கொடுத்த கட்சியமைப்பில் சிற்சில விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலும், பெரியாரின் திராவிடர் கழகத்தில் பெரும்பங்கைப் பற்றிக் கொண்டிருப்பதான, திரு. கி. வீரமணி அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்ட திராவிடர் கழகமே தாய்க்கழகமாகவும், மக்களிடையில் அவ்வகையில் மிகுந்த சாய்கால் உள்ளதாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் இருந்து, செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே! எனவே, இற்றை நிலையில் பொதுவாக, திராவிடர் கழகம் என்பது திரு. கி. வீரமணி அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்ட கழகத்தையே குறிக்கும். அவ்வாறு குறித்துக் கொண்டுமிருக்கின்றது.

இனி, திராவிடர் கழகம் தந்தை பெரியார் காலத்திலும் சரி, திரு. விரமணி அவர்களின் காலத்திலும் சரி, மக்கள் நலம் கருதும் செயல்களில், குறிப்பாகத் தமிழினத்திற்குப் பாடுபடும் செயல்களில் அதுவே இங்குள்ள பிற அரசியல், பொதுநலக் கட்சிகளை விட மிகுந்த அளவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கட்சியாக இருந்தது; இன்னும் இருக்கிறது. ஒரு கட்சி, தன் கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கின்ற மாநாடுகளும், போராட்டங்களுமே, அதன் செயற்பாட்டைப் போதுமான அளவில் மக்கள் உணர்ந்துகொள்ளத் துணைசெய்வன ஆகும். அவ்வாறு பார்க்கையில், திராவிடர் கழகம் பெரியார் காலத்திலேயே நடத்தி வந்துள்ள தன் கட்சி மாநாடுகளைத் தவிர அது நடத்திய பகுத்தறிவு மாநாடு, பெண்கள் நலவுரிமை மாநாடு, இந்தி யெதிர்ப்பு மாநாடு, திருக்குறள் மாநாடு, சாதி யொழிப்பு மாநாடு, வகுப்படிப்படையில் பங்கு ஒதுக்கீட்டு மாநாடு (வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மாநாடு) முதலிய பொது நலக் குறிக்கோளைக் கொண்ட மாநாடுகளும் வீரமணி காலத்தில் நடைபெறும் இந்தியெதிர்ப்பு மாநாடு, பார்ப்பன வல்லாண்மை (ஆதிக்க) எதிர்ப்பு மாநாடு, அண்மையில் குடந்தையில் நடந்த ‘பார்ப்பன வல்லாண்மை ஒழிப்பு மாநாடு’ முதலிய மாநாடுகளும், அக்கழகக் கொள்கையில் உறுதிப்பாட்டை நன்கு விளக்குவன ஆகும். இன்னும் பெரியார் நடத்திய போராட்டங்களும், வீரமணி நடத்தி வரும் போராட்டங்களும் இந்தி யெதிர்ப்புப் போராட்டம், ‘பிராமணர்’ சொல்லழிப்புப் போராட்டம், கருவறைப் போராட்டம் முதலியன) முழுவதும் தமிழின நலங் கருதியவையே ஆகும். இவ்வகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும், பதவி நலமும் அரசியல் ஊதியமும் கருதிப் போகையில், திராவிடர் கழகம் ஒன்றே முழுக்க முழுக்க தமிழின நலமும், தமிழர் இன இழிவு நீக்கமும் நாடிப் போகின்ற தமிழர் இயக்கமாக நமக்குத் தென்படுகின்றது. எனவே, திரு. வீரமணி அவர்கள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு நம் முழு