பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

213

பள்ளிகளுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி, பார்ப்பனர்கள் தமிழில் பெயரிடுவதில்லை என்பதை, இந்த மானங்கெட்டத் தமிழர்கள் முதலில் உணரவேண்டும்.) இந்த ‘வித்யா மந்திர்’ ஒப்பந்த அடிப்படையில் ஏற்பட்ட தனியார் பள்ளி. இது சென்ற ஆண்டு சூன் திங்கள் தொடங்கப்பெற்று நடைபெற்று வருகிறது.

இப் பள்ளியில் நடுவணரசுப் பாடத் திட்டப்படி கல்வியமைப்பு உள்ளது. அதன்படி இங்கு ஆங்கிலம் முதல்மொழியாகவும், இந்தி இரண்டாம் மொழியாகவும் கட்டாயமாகக் கற்பிக்கப்படுகின்றன. மூன்றாம் பாடம் விருப்பப்பாடம். இதில் சமசுக்கிருதமும் தமிழும் பயிற்றுவிக்கப் பெறுகின்றன. மேலும் பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியாக(English Medium) மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. தமிழ் வழியாகப் (Tamil Medium) பாடங்களைக் கற்பிக்கும் வகுப்புகள் இல்லை. பள்ளி தொடங்கப்படும் பொழுதே தமிழைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பார்ப்பனர்கள் செயல்பட்டதாகத் தெரிகிறது. எனவே தமிழ்வழியாகவோ, தமிழிலோ கற்பிக்கப்படும் எண்ணமே அவர்களுக்கு இருந்திருக்கவில்லை என்று உணர முடிகிறது.

மேலும் இப்பள்ளி ஒப்பந்த அடிப்படையில் இங்கு அமைந்திடக் காரணம், பெரும்பாலான அதிகாரிகளின் பிள்ளைகள் சுவர்ணபுரி (இது அழகாபுரம் என்று தமிழ்ப் பெயரால் இருந்த பகுதி. இதையும் பார்ப்பனர்கள் 'ஸ்வர்ணபுரி' என்று வடமொழி மாற்றம் செய்திருக்கின்றனர்.) என்னும் சேலம் நகர்ப் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்தவர்கள் என்பதே.

மாதம் ஒன்றுக்கு 'வித்யா மந்திர்' பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரிடம் 30 உருபா கல்விக் கட்டணமாகத் தண்டப் பெறுகிறது. இதில் உருக்காலை ஆளுமை நிர்வாகம் மாணவரின் தந்தையான பணியாளர்க்கு ஏறத்தாழ 50 விழுக்காடு திரும்ப வழங்குகிறது. இது தவிர, பள்ளிக் கட்டிடம், மின்சாரம், மிசைகள், நாற்காலிகள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களை ஒப்பந்தரக்காரர்க்கு இலவயமாக வழங்குவதுடன், அவர்களுக்கு ஏற்படும் இழப்பையும் ஏற்றுக் கொள்கிறது.

இதில் இன்னோர் உண்மை என்னவென்றால் அங்குள்ள உருக்காலையில் பணியாற்றும் பணியாளர்களில் ஒரு கணிசமான தொகையினர், தங்கள் பிள்ளைகளைத் தமிழ் வழியாகக் கற்பிக்க விருப்பமிருந்தும், வேறு வழியில்லாததால் அனைத்துப் பிள்ளைகளும்