பாவலரேறு பெருஞ்சித்திரனார்
245
அந்த மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டு, அதன் விதையை நல்ல நிலத்தில் ஊன்றி, நறுநீர் பாய்ச்சி வளர்க்க வேண்டும். அப்பொழுது அதனால் கிடைக்கும் பயனும் நல்லதாகவே இருக்கும்.
இறைமை என்பது ஒர் இயற்கை உணர்வு. அது வேறுபாடற்றது; உரிமையைத் தூண்டுவது; விடுதலைக்கு வேரானது; சமநிலை உடையது; சமத்துவம் கற்பிப்பது இன்பம் நல்குவது; பகைமையைத் தவிர்ப்பது; மாந்தனின் அகங்காரத்தை அகற்றுவது; அறிவை உணர்த்துவது; அன்பை வளர்ப்பது; அறியாமையைத் தூர்ப்பது; தந்நலத்தை மறுப்பது; பொதுநலத்தைத் தூண்டுவது; மக்களை ஒன்றுபடுத்துவது; பாகுபாட்டை அவிழ்ப்பது; இறைமைக்குச் சாதியில்லை; ஏழைமையில்லை. இதற்கு நேர்எதிரான மெய்ம்மங்களைக் கொண்டதே மதம்!
இதேபோல்தான் முதல் (பொருள் - Capital) என்பது இவ்வுலக வாழ்க்கைக்கு மூலமானது; முதலானது; உரிமையைத் தூண்டுவது; உழைப்பை உணர்த்துவது மக்கள் சமத்துவத்திற்கு அடிப்படையானது; வேறுபாட்டை அகற்றுவது; இன்பம் நல்குவது; பகையைத் தவிர்ப்பது; மாந்தனிடம் ஆக்க உணர்வுகளான அறிவு, அன்பு இவற்றை வளர்த்தெடுப்பது; சாதியைத் தொலைப்பது; மக்களை ஒன்றுபடுத்துவது!
ஆனால், இறைமை மதமாக வளர்ந்து தீமை தருவது போல், முதல் முதலாளியமாக வளர்ந்து தீமை தருகிறது. எனவேதான் முதல் தேவை; முதலாளியம் தேவையில்லை - இதேபோல் இறைமை தேவை, மதம் தேவையில்லை - என்கிறோம்.
இனி, பொதுவுடைமையை வளர்க்கப் புறப்பட்ட நம் இளைஞர்கள், இவ்வேறுபாடுகளை நுணுகி ஆய்ந்து உணராமல், மதத்தை ஒழிக்கின்ற நோக்கத்தோடு, சாதியை ஒழிக்கின்ற நோக்கத்தோடு, அவற்றுக்கு அடிவேராக - வித்தாக - இறைமை இருப்பதாக கருதிக்கொண்டு, அதையும் ஒழிக்க எண்ணங் கொண்டிருக்கிறார்கள்.
இறைமை இயற்கையான ஒர் உணர்வாதலின், அதை ஒழிக்க இயலாமல் அல்லற்படுகின்றனர். மதம் இறைமையின்மேல் கட்டப் பெற்ற ஒரு செயற்கை உணர்வு. அதில் மக்களினத்துக்குத் தேவையல்லாத - தீங்கான பல கூறுகள் இருப்பதால், அதை ஒழித்தே ஆகவேண்டும் என்று நினைப்பது சரி. ஆனால் அதற்காக இயற்கை உணர்வான இறைமையையே ஒழிக்க முயல்வதால்தான்