பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ எனும் தனித் தலைப்பிட்ட கட்டுரை தென்மொழியின் ஆசிரியவுரையில் தொடராக வெளிந்தவை.

அத் தொடர் கட்டுரை சிறுவெளியீடாக மூன்று மறுபதிப்புகளோடு இதற்கு முன்னர் வெளியிடப் பெற்றிருக்கின்றன என்றாலும், ஆரியப் பார்ப்பனக் கொட்டங்கள் குறித்து ஐயா அவர்களால் எழுதப் பெற்ற அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பாக இந்நூல் இப்போதே முதல் பதிப்பாக வெளிவருகின்றது.

இத் தொகுப்புள் முதல் கட்டுரையாக ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் அமைக்கப் பெற்று, அதைத் தொடர்ந்த கட்டுரைகள் கால வரிசைப்படி நிரல்படுத்தப்பட்டுள்ளன

இவையன்றி, ஆரியப் பார்ப்பனியம் குறித்து எழுதப்பெற்ற ஐயா அவர்களின் பாடல்கள் யாவும் கனிச்சாறு (பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்) தொகுப்புள் உள்ளடக்கப்பட்டதால், இக் கட்டுரைத் தொகுப்புள் இணைக்கப் பெறவில்லை.

பாவலரேறு தமிழ்க்களம் – கட்டுமானப் பணி, அலுவலக அமைப்புப் பணிச் சுமைகளின் அழுத்தத்தால் கடந்த ஈராண்டுகளாக ஐயா அவர்களின் நூல்கள் வெளிக்கொண்டுவர வேண்டிய பெரும்பணிகள் இடைநின்று போயின.

இனி, ஐயா அவர்களின் வெளிவராத நூல்கள் அனைத்தும் ஒருசேரவும், வெளிவந்த நூல்களின் மறுபதிப்புகள் அனைத்தும் ஒருசேரவும் படிப்படியாக ஓராண்டுக்குள் முழுமையாக வெளியிடப்பட வேண்டுமான முயற்சி மேற்கொள்ளப் பெற்றிருக்கிறது.

தென்மொழி பதிப்பகம் – முன்னெடுத்திருக்கிற இம் முயற்சிக்குத் துணை வேண்டி தென்மொழியில் வேண்டுகை வெளியிடப் பெற்றது.

சிலர் உடனடியாக முன்தொகை செலுத்தியிருந்தனர். அவர்களின் பெருந்துணையைக் கொண்டும், பிற வகையில் கடன்பெற்றும் இந் நூல் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்றிருக்கின்றன.