பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


வேதமுடைய திந்த நாடு - நல்ல
வீரர் பிறந்திந்த நாடு;
சேதமில் லாத ஹிந்துஸ் தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!” - என்றும்,

அவர் வேதப் பெருமைகளாகக் கூறுபவை யெல்லாம் ஆரியத்தின் பெருமைகளைப் பறைசாற்றவே கூறியவையாகும். வேதங்களை மட்டுமின்றி ஆரிய நூல்கள் அனைத்தையும் பாராட்டும் வகையில்,

அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்
ஆணிமுத்துப் போன்றமணி மொழிகளாலே
பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்,
பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்
இன்னும்பல் நூல்களிலே இசைத்தஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?”

- என்று பலவாறாக உண்மைக்கு மாறாகக் கட்டி உரைப்பது அவர் ஆரிய மதிமயக்கத்தினின்று விடுபடவில்லை என்பதையே காட்டுவதாகும். மேலும் இவரைப் பற்றியும் இவர் எழுதியுள்ள கதைகள் கட்டுரைகள் முதலியவற்றில் உள்ள ஆரியக் கருத்துகள் பற்றியும் இன்னும் பிறரைப் பற்றியும் கூறுவதென்றால் இக்கட்டுரை அளவிறந்து நீளும் என்பதால் இக்கருத்துரைகளை இவ்வளவில் நிறுத்திக் கொள்வோம்.

மொத்தத்தில் நாம் குறிப்பிட வந்தது, ஆசியப் பார்ப்பனர்கள் தமிழ் நிலையிலாயினும் சரி, குமுகாய நிலையிலாயினும் சரி, அரசியல், தொழில், சமயம் முதலிய எந்த நிலைகளிலாயினும் சரி. அக்காலத்திலிருந்து இக்காலம் வரை, தமிழர்களுடன் இரண்டறக் கலந்து உறவாடவில்லை என்பதையும்; அவர்கள் தவிர்க்கவியலாத நிலையில் தமிழ்நாட்டில் தமிழர்களிடையில் தமிழர்களைப் போன்றே வாழ நேரிட்டாலும், அவர்கள் மனநிலையில் எவ்வகை மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும், அவர்கள் இன்றும் தங்களை உயர்ந்தவர்களாகவும், தங்கள் மொழியையே தேவமொழி அதுவே உலகிற்கு மூலமொழியென்று நம்புபவர்களாகவும், அப்படி நம்பச் செய்பவர்களாகவும், அப்படி நம்புகின்ற பிற இனத்தவரையே தாங்கிப் போற்றிக் கொள்பவர்களாகவுமே இருக்கின்றார்கள் என்பதையும்; அந்த நிலைகளுக்கு உ.வே. சாமிநாதர் போலும் தமிழறிஞர்களும், பரிதிமாற்கலைஞர் போலும் தனித்தமிழ் வழிகாட்டிகளும், பாரதியார் போலும் பாவலர்களுங்கூட விலக்கல்லர் என்பதையும் உணர்த்த வேண்டியே ஆகும்.