பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை

தமிழர், தென்னிந்திய மண்ணுக்குரியவர்

ஓரின மக்களின் நாகரீகம், அவர் வாழும் மண்ணுக்கு உரியதாயின். அந்நாகரீகம், அம்மக்கள், பிற இனமக்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பே வளர்ந்து முழுமை பெற்ற ஒன்றாகக் காணப்படுமாயின், அந்நிலைக்கு, அம்மக்கள் வாழும் இயற்கைச் சூழ்நிலை, அம்மக்கள் மீது செலுத்திய ஆட்சியின் விளைவே முழுமுதல் காரணமாம். ஓரின மக்கள் தங்கள் வாழ்க்கைச் சூழ்நிலையோடு தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு வந்ததன் விளைவாகத் தோன்றிய ஒரு நாகரீகம், அம்மக்கள் வாழும் நில இயல் கூறுபாட்டுக் காரணம் அடிப்படையில் எழுந்ததேயல்லது, வென்று அடிமைகோடல், வாணிகம், மற்றும் பிற அறவழி மூலம் அம்மக்களோடு தொடர்பு கொண்டுவிட்ட வெளி நாட்டவரின் ஆதிக்க விளைவு போலும் வரலாற்றுக்கான அடிப்படையில் எழுந்ததாகாது.

தொல்லூழிக் காலத்தில், மனித வாழ்க்கையில், இயற்கைச் சூழ்நிலை செலுத்திய ஆட்சியின் விளைவாக மனித நாகரீகம் தமிழகத்தில் படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்ற வளர்ச்சி நிலையினைக் கண்டுகொள்ளக்கூடிய நிலையில் நாம் உள்ளோம். நிலத்துக்கடியில் வியத்தகு - கனிவளச் செல்வங்களையும் நிலப்பரப்பின் மேல், எண்ணிக் காணமாட்டாது வேறு வேறுபட்ட மாவடை, மரவடைகளையும், ஒருபால், பெருநீர்ப்பரப்பையும், பிறிதொருபால் பெருநிலப் பரப்பையும் கொண்டதாய தட்பவெப்ப நிலையினையும் கொண்டு, மனித இனத்தின் வளர்ச்சியில், அதிலும் அவனுடைய தொடக்கநிலை வளரச்சிப் பருவத்தில், ஒப்புயர்வற்ற நிலையில் துணை நிற்பதாக இருந்தும், வளங்கொழிக்கும் இந்திய நாடு, தன் மைந்தர்களின் வாழ்க்கை நிலைக்கும், தன் வரலாற்று ஏடுகளுக்குப் பெருமை சேர்க்கும்